டாடா டெலிகாமுக்கு முறைகேடாக ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கப்படவில்லை-சிபிஐ
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் டாடா டெலிகாமுக்கு தொடர்பில்லை என்று முதல் முறையாக சிபிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக ராசா, கனிமொழி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரத்தன் டாடா, அவரது நிறுவனத்திற்கு பிஆர் வேலை பார்த்த நீரா ராடியா ஆகியோரையும் சேர்க்க வேண்டும் என்று வழக்கறிஞர் தர்மேந்திர பாண்டே கோரியிருந்தார். இதுதொடர்பாக அவர் மனு ஒன்றையும் சிபிஐயிடம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், டாடா டெலிகாம் நிறுவனத்திற்கு இந்த ஊழலில் பங்கில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஐ கூறுகையில், ரத்தன் டாடா உள்ளிட்டோரின் தொடர்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அதில், டாடா டெலிகாம் நிறுவனத்திற்கு லைசென்ஸ் வழங்கியதில் எந்த முறைகேடும் நடந்ததாக தெரியவில்லை. எனவே இந்த ஊழலில் டாடா டெலிகாமுக்குத் தொடர்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.