இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் செய்யப் போகும் சீமான்-வக்கீல்
சீமான் பெயரைக் கெடுக்கும் சதித் திட்டத்துடன்தான் நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்துள்ளார். இதை சட்டப்படி சீமான் சந்திப்பார் என்று அவரது வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.
நடிகை விஜயலட்சுமியின் புகாரைத் தொடர்ந்து அவரது வழக்கறிஞர் சந்திரசேகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்தது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. விஜயலட்சுமி, அவரது அக்கா விவாகரத்து வழக்கு தொடர்பாக உதவி கேட்டு, சீமானை ஒருமுறை சந்தித்து பேசினார். அது தொடர்பாக உதவி செய்யும்படி, சீமான் என்னிடம் கூறினார்.
அந்த ஒருமுறை மட்டுமே விஜயலட்சுமி சீமானை சந்தித்து பேசினார். அதன் பிறகு, அவர் சீமானை பார்க்கவே இல்லை. அரசியலில் சீமானுக்கு உள்ள புகழை அழிக்கவும், திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. புகார் கொடுத்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை சீமான் சட்டப்பூர்வமாக சந்திப்பார்.
சீமான் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். அவரது பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதை கெடுக்கவும், அரசியலில் சீமானுக்கு உள்ள புகழை அழிக்கவும், திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது என்றார் சந்திரசேகரன்.