2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு-தயாளு அம்மாளுக்கு எதிரான மனு தள்ளுபடி
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு நிறுவன அதிபர் அனில் அம்பானி, டாடா டெலிகாம் நிறுவன அதிபர் ரத்தன் டாடா, தொழில்துறை தரகர் நீரா ராடியா ஆகியோருக்கு எதிரான மனுக்களை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் வகையில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, இதை தாக்கல் செய்த 2 பேருக்கு தலா ரூ. 10,000 அபராதமும் விதித்தார் நீதிபதி ஓ.பி.ஷைனி.
டெல்லியைச் சேர்ந்த பர்குவான், காசியாபாத்தைச் சேர்ந்த தர்மேந்தர் பாண்டே ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில் மேலே குறிப்பி்ட்ட 4 பேரையும் குற்றப்பத்திரிகையில் சேர்க்க வேண்டும் என்று கோரியிருந்தனர். மேலும் அனில் அம்பானி தொடர்பான உண்மைகளை மறைத்துவிட்டு ரத்தன் டாடா, நீரா ராடியாவை மட்டுமே குறி வைத்து சிபிஐ செயல்படுவதாகவும் அவர்கள் தங்களது மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி அவற்றைத் தள்ளுபடி செய்தார். மேலும் இந்த மனுவை தாக்கல் செய்தவர்களுக்கு கண்டனமும் தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் வகையில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதுடன் இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த அபராதத் தொகையை மூன்று வாரங்களுக்குள் மனுதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களைத் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.