சூலூர் எம்.எல்.ஏ தினகரன் கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பினார்
சூலூர்: சூலூர் எம்.எல்.ஏ சென்ற கார் மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக எம்.எல்.ஏ உயிர் தப்பினார்.
சூலூர் எம்.எல்.ஏ
கடந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இளம் சட்டமன்ற உறுப்பினர் தினகரன். இவர் சூலூர் தொகுதிக்குட்பட்ட சோமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சுற்றுப்பயணம் கிளம்பினார். அவருடன் உதவியாளர்கள் சசிக்குமார், கனகராஜ் ஆகிய இருவரும் சென்றனர்.
விபத்து
சுற்றுப்பயணம் முடிந்து சொந்த ஊர் பள்ளப்பாளையத்திற்கு ஸ்கார்பியோ காரில் திரும்பிக்கொண்டிருந்தார். பள்ளபாளையம் டாஸ்மார்க் அருகே இருந்த திருப்பத்தில் கார் திரும்பியபோது, எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் மோதியது. மோதிய வேகத்தில் கார் தலைகீழாக திரும்பியது.
தப்பினார் எம்.எல்.ஏ
இதில் கனகராஜ், சசிக்குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். எம்.எல்.ஏ தினகரன் காயங்கள் ஏதுமின்றி தப்பித்தார். காயமடைந்த இருவரும் சூலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.