நட்ட நடு ராத்திரியில் பற்றியெரியும் வாகனங்கள் - கலங்கி நிற்கும் காவல்துறை
கோவை : கோவையில் நள்ளிரவில் வாகனங்கள் கொளுத்தப்படுவது தொடர்கதையாகிறது. நகரின் மையப்பகுதியில் நேற்றிரவு 5 இருசக்கர வாகனங்கள் கொளுத்தப்பட்டன.
நள்ளிரவு குற்றங்கள்
கோவையில் கடைத்தெருவில், நகை பட்டறைகள் மற்றும் வீடுகள் முன் நிறுத்தப்படும் டூ வீலர்கள் மற்றும் கார்கள் நள்ளிரவில் தீ வைத்து எரிக்கப்படுகின்றன.
கடந்த 3 மாதங்களில் மட்டும் இதுவரை 10 வாகனங்களுக்கும் மேல் எரிக்கப்பட்டுள்ளன. மர்ம நபர்கள் வாகனங்கள் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டு தலைமறைவாகி விடுவதாக போலீஸ் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனாலும், இதுவரை தீ வைக்கும் சமூக விரோதிகளை போலீசாரால் பிடிக்கவில்லை.
இதைப்போலவே, நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு பிச்சைக்காரர், வணிக வளாகத்தில் தூங்கிக்கொண்டிருந்த காவலாளி ஆகியோர் தலை மீது கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த நடுநிசிக்கொலைகளைச் செய்தவர்களையும் காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.
5 வாகனங்கள் எரிக்கப்பட்டன
இந்நிலையில் நேற்றும் 5 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நேற்று அதிகாலையில்பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் பகுதியில் 4 பைக்குகளும், ஒரு ஸ்கூட்டரும் கொளுத்தப்பட்டுள்ளன.
பழையூர் சீர்காளியம்மன் கோவில் வீதியில் டூ வீலர் ஒர்க்ஷாப் நடத்தி வரும் செந்தில்குமாரின் ஓர்க் ஷாப் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பைக்குகள், ரங்கம்மாள் கோவில் வீதியைச் சேர்ந்த கோவை மாநகர போலீலீசில் பணியாற்றும் சங்கர் கணேஷ், இதே வீதியில் வசிக்கும் ரெசிடென்ஸி ஓட்டல் ஊழியர் கார்த்திகேயன் ஆகியோரின் பைக்குகளும் எரிக்கப்பட்டன.
தவிர, மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரது பைக்கும் எரிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 3 வீதிகளில் 5 வாகனங்கள் கொளுத்தப்பட்ட சம்பவம் இப்பகுதி மக்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
விசாரணை
வாகனங்கள் எரிக்கப்பட்டது தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.