தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி-தினமணி மீது திமுக பாய்ச்சல்!
முரெசாலியில் வெளியாகியுள்ள கட்டுரையில், நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது அ.தி.மு.க. அணி வெற்றி பெற அரும்பாடு பட்ட தமிழ் நாளேடு தினமணி. அந்தத் தினமணியின் டெல்லிப் பதிப்பு 3ம் தேதி தொடங்குகிறது.
தொடங்கி வைப்பவர் யார் தெரியுமா ?.
இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி அவர்கள் தான்.
அ.தி.மு.கவின் ஆதரவு ஏடான தினமணி டெல்லிப் பதிப்பை தொடங்கி வைக்கிறார்.
தமிழகத் தேர்தலை மிகவும் கண்டிப்பாக- கறாராக- நடுநிலை தவறாமல் நடத்துவதற்கு முழு முதல் காரணமாக இருந்த அதிகாரிதான் தினமணி நாளிதழின் டெல்லிப் பதிப்பைத் தொடங்கி வைக்கிறார்?.
அப்படி எனறால், தினமணிக்கும் டெல்லி தேர்தல் ஆணையருக்கும் என்ன தொடர்பு?.
அவர் எப்படி இந்த விழாவில்?, கணக்கு எங்கேயோ இடிக்கிறதா?, ஏதாவது புரிகிறதா?, புரிந்தால் சரி!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரைவில் திருச்சி மேற்கு தொகுதிக்கு இடைத் தேர்தல்:
இந் நிலையில் அமைச்சர் மரியம் பிச்சையின் மரணத்தால் காலியாகியுள்ள திருச்சி மேற்கு தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார்.
இதேபோல புதுச்சேரியில் முதல்வர் என்.ரங்கசாமி ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள இந்திரா நகர் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், காலியாக உள்ள சட்டப் பேரவை தொகுதிகளுக்கு 6 மாதத்துக்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. எனவே மாநில தேர்தல் அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும். தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையத்தில் தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
தேர்தலின் போது புதிய வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளை வகுத்து தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. பிகார் தேர்தலில் தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் நல்ல பலனை தந்தது என்றார் அவர்.