நில மோசடியில் அதிமுக பிரமுகர்கள்-ஜெ.விடம் புகார் கூறப்போவதாக டாக்டர் கிருஷ்ணசாமி தகவல்
தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நில மோசடியில் அதிமுக பிரமுகர்கள் உடந்தையாக இருப்பதாகவும், இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார் அளிக்கப்படும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சியின் நிருவனரும் ஓட்டப்பிடாரம் தொகுதியின் எம்எல்ஏவுமான கிருஷ்ணசாமி தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட தாமிரபரணி குடிநீர் வழங்க சட்டசபையில் குரல் கொடுப்பேன். ஓட்டப்பிடாரம் தொகுதியில் 20 இடங்களில் திருட்டுதனமாக தண்ணீர் அபகரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அந்த 20 இடங்களில் இருந்தும் தண்ணீர் எடுப்பதற்கு வருவாய்துறையினர் தடை பிறப்பித்துள்ளனர். இருப்பினும் அதனையும் மீறி லாரிகளில் தண்ணீர் கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலை மாறவில்லை எனில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.
ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் போலி பத்திரங்கள் மூலம் உரிமையாளர்களுக்கு தெரியாமல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பலர் என்னிடம் புகார் தெரிவித்தனர். இந்த நில மோசடியில்அதிமுக பிரமுகர்கள் சிலர் உடந்தையாக உள்ளது தெரிய வந்துள்ளது. அந்த நபர்கள் மீது முதல்வரிடம் புகார் தெரிவிப்பேன்.
இந்த நில மோசடிகளை தடுத்து நிறுத்தும் வகையில் ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட 7 சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் மாலை 3 மணிக்கு மேல் பத்திர பதிவு செய்ய கூடாது, பவர் பத்திரம் கொண்டு பத்திரபதிவு செய்ய கூடாது என்றும் கோரிக்கை வைப்போம்.
தொகுதியில் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் வரும் 15ம் தேதி புதுக்கோட்டையில் விவசாயிகள் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஒருகலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.