தேர்தல் தோல்வி: புதுவை காங். கூட்டத்தில் தள்ளு முள்ளு-வாட்டர் பாட்டில் வீச்சு!
புதுச்சேரி: நடந்து முடிந்த புதுச்சேரி சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து நடந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், திமுக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் 17 தொகுதிகளில் போட்டியிட்டு 10 இடங்களில் படுதோல்வி அடைந்தது. அதற்கான காரணம் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் கூட்டம் நேற்று கிரீன்பார்க் ஹோட்டலில் நடந்தது.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநில பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி ஆகியோர் மேடையில் அமராமல் கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்திருந்தனர்.
கூட்டம் தொடங்கியவுடன் நிர்வாகிகளின் கருத்து கேட்கப்பட்டது. அப்போது சிலர் ஒரே நேரத்தில் எழுந்து தோல்விக்கு அமைச்சர்கள் தான் காரணமே தவிர தொண்டர்கள் அல்ல என்று கூச்சலிட்டனர். இதையடுத்து தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் முதலியார்பேட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் தங்கமணியின் சட்டை கிழிந்தது. ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் பாட்டில்களை வீசினர்.
இதனால் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.