கொள்ளிடக் கரையை பலப்படுத்துவதில் கோடிக் கணக்கில் ஊழல்: சிபிஎம் குற்றச்சாட்டு
சிதம்பரம்: கொள்ளிடக் கரையை பலப்படுத்துவதில் கோடிக் கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளதாக சிதம்பரம் தொகுதி சட்டசபை உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறி்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் தொகுதி சட்டசபை உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சிதம்பரம் அருகே உள்ள சின்னகாரமேடு கிராமத்தில் இருந்து திருவிடைமருதூர் வட்டம் அணைக்கரை வரை கீழணையை 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ. 108.48 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் இடது கரையை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிக்கு வீராணம், பொன்னேரியில் இருந்தும் மண் எடுத்து கரையை பலப்படுத்த வேண்டும் என்று வரைவு திட்டத்தில் உள்ளது.
ஆனால் இந்த விதிமுறைகளுக்கு மாறாக அருகில் உள்ள வயல் வெளிகளில் இருந்து மண் எடுத்து கொட்டப்படுகிறது. இதனால் மழைக் காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு கரையே காணாமல் போகும் அபாயம் உள்ளது.
மேலும், 3 அடிக்கு ஒரு முறை மண்ணை கெட்டிப் படுத்த வேண்டும் என்றும் வரைவு திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது 7 அடிக்கு மண் கொட்டியும் கெட்டிப்படுத்தாமல் உள்ளது.
இந்த பணிக்கு கடந்த திமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை எடுத்தவர்கள் திமுகவின் முக்கிய புள்ளிகள் என்பதால் அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டனர். இதனால் ஊழல், முறைகேடு நடைபெற்றுள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார்.