புகார்களை எஸ்எம்எஸ் செய்தால் போதும்-கோவை புதிய கலெக்டர் அறிவிப்பு
கோவை: கோவை மாவட்டத்தின் புதிய கலெக்டராக கருணாகரன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
உமாநாத் மாற்றம்
கோவை மாவட்டத்தின் கலெக்டராக பணியாற்றிய உமாநாத் தமிழக அரசின் நிதித்துறை இணைச் செயலராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, புதிய கலெக்டராக கருணாகரன் நியமிக்கப்பட்டார்.
கருணாகரன்
கருணாகரன் இதற்கு முன் கோவையில் மாநகராட்சி துணைகமிஷனராகவும், மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணிபுரிந்தவர். அதற்குப் பின் சென்னைக்கு மாற்றப்பட்ட இவர், சென்னை மாநகராட்சியிலும், தஞ்சாவூர் மாவட்டத்திலும் வருவாய் அலுவலராகவும் பணிபுரிந்துள்ளார்.
கோவைக்கு இடமாற்றம் பெறுமுன் இவர் சென்னை ஆவின் இணை நிர்வாக இயக்குனராக பதவி வகித்தவர். இவரது மனைவி ஹேமா ஐ.பி.எஸ்., அதிகாரியாக உள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
எஸ்.எம்.எஸ் போதும்
புதிய அரசின் அனைத்து நலத்திட்டங்களும் முழுமையாகவும், சிறப்பாகவும் நிறைவேற்றப்படும். நலத்திட்டங்களை சிறப்பாக நிறைவேற்ற, அனைத்து அரசு ஊழியர்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன். மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்கும்.
சிறு சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டாலும் உடனடியாக களையப்படும். திங்கள்தோறும் நடைபெறும் குறைதீர்ப்பு முகாமில் பங்கேற்று பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவிக்கலாம். குறைகளை நேரில் தெரிவிக்க முடியாதவர்கள் எனது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். அல்லது, என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் என தெரிவித்துள்ளார் புதிய கலெக்டர் கருணாகரன்.