சொத்து விவரப் பட்டியலை வெளியிடுகிறார் பாபா ராம்தேவ்
ஊழலுக்கு எதிராக போராடுவதாக களம் இறங்கியுள்ளார் ராம்தேவ். ஆனால் இவர் ஆர்எஸ்எஸ் பின்புலத்துடன் போராட்டம் நடத்தி வருவதாக மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் குற்றம் சாட்டி வருகின்றன.
மேலும் ராம்தேவ் ஒரு ரவுடி, கூலிப்படையை வைத்து மக்களை திசை திருப்பி வருகிறார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டி வருகிறார்.
இந்த நிலையில் ராம்தேவின் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள், நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ரெய்டுகளில் குதிக்கவுள்ளனர்.
இந்த நிலையில், தனது சொத்து விவரத்தை இன்று பகிரங்கமாக வெளியிடப் போவதாக ராம்தேவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் மோசடியாகவும், சட்ட விரோதமாகவும் சொத்துக்களைக் குவித்துள்ளதாக சிலர் அவதூறாகப் பிரசாரம் செய்து வருகின்றனர். அவை பொய் என்பதை நிரூபிக்க எனது சொத்து விவரங்களை நான் பகிரங்கமாக அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
அதேபோல அடுத்த முறை நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவோம் என்று கூறியதில் எந்தத் தவறும், சட்டவிரோதமும் இல்லை என்றும் ராம்தேவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பயன்படுத்திய வார்த்தைகள் சரியானவைதான். அதில் என்ன தவறு இருக்கிறது. எங்களை அடிப்பவர்களைத் திருப்பி அடிப்போம் என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது. வீரம் குறித்துத்தான் நான் பேசினேன். அதுதான் தவறா என்றார் ராம்தேவ்.