நான் சொன்ன ஆயுதப் படை தேசியவாதப் படை-ராம்தேவ் விளக்கம்
10 ஆயிரம் பேரைக் கொண்ட ஆயுதப் படையை உருவாக்கப் போகிறேன். அடுத்த முறை எங்களை யாராவது தாக்கினால் நாங்கள் திருப்பித் தாக்குவோம். பெண்களையும் இப்படையில் இணைத்து பயிற்சி தருவோம் என்று கூறியிருந்தார் ராம்தேவ். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து பல்டி அடித்துள்ளார் ராம்தேவ்.
ஹரித்வார் ஆசிரமத்தில் அவர் பேசுகையில், நான் தீவிரவாதிகளையோ அல்லது நக்சலைட்களையோ அல்லது மாவோயிஸ்ட்களையோ சேர்த்து பயிற்சி தரப் போவதில்லை. நான் உருவாக்கப் போவது தேசியவாதப் படைதான். தேசிய உணர்வு கொண்ட படையைத்தான் உருவாக்கப் போகிறேன். இது சுய பாதுகாப்புக்காக மட்டுமே.
நான் சொல்லிய வார்த்தைகளை சரியான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். நமது பெண்கள் எதிர்த்துத் தாக்குதல் நடத்தும் தைரியத்தையும், பயிற்சியையும் பெற்றால், யாரும் அவர்களைச் சீண்ட முயற்சிக்க மாட்டார்கள். இதனால்தான் தேசியவாத படையை உருவாக்க நான் விரும்புகிறேன் என்றார் ராம்தேவ்.