ஜூன் 15 முதல் பெங்களூர்-சென்னை நெடுஞ்சாலையில் லாரிகள் ஓடாது: மோட்டார் காங். அறிவிப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுங்கச் சாவடியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 15-ம் தேதி முதல் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரிகளை இயக்க மாட்டோம் என அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கடந்த 8-ம் தேதி முதல் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் கிருஷ்ணகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா தலைமை வகித்தார்.
அப்போது சண்முகப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கர்நாடக எல்லை அத்திப்பள்ளி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை அமைக்கப்பட்ட இந்த 4 வழிச்சாலை கடந்த 2007-ம் ஆண்டு முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.
அப்போது கிருஷ்ணகிரி, பள்ளிகொண்டா, வாலாஜா ஆகிய இடங்களில் மட்டும் சுங்கம் வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது மொத்தம் 6 இடங்களில் வசூலிக்கப்படுகிறது.
இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ. 80 லட்சமும், ஆண்டுக்கு சராசரியாக ரூ. 290 கோடியும் வசூல் செய்யப்படுகிறது.
இந்த சாலை அமைக்க செலவு செய்த தொகை ரூ. 650 கோடி மட்டுமே. ஆனால் இது வரை ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளது.
2008-ம் ஆண்டு முதல் மல்டி ஆக்சில் வாகனங்களை 5-க பிரித்து ரூ. 100 முதல் ரூ. 315 வரை சுங்கம் வசூல் செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் வசூல் உரிமையை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வைத்திருந்தபோது இருந்ததை விட தற்போது தனியார் நிறுவனம் பல மடங்கு அதிகமாக வசூல் செய்கின்றது.
இதை திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 15-ம் தேதி முதல் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரிகளை இயக்க மாட்டோம் என்றார்.