ஈழத் தமிழர்களுக்காக இந்தியத் தலைவர்களின் ஆதரவை ஜெ. திரட்ட வேண்டும்-நெடுமாறன்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ராஜபட்சே போர்க் குற்றவாளி என ஐ.நா. விசாரணைக் குழு அளித்தப் பரிந்துரையை ஏற்று சர்வதேச நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை நடவடிக்கைகளை எடுக்கவும் இந்திய அரசு முன் வரவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்பதோடு அவரை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.
ஆறரைக் கோடி தமிழ் மக்களின் பிரதிநிதித்துவ அமைப்பான தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும்.
ராஜபட்சேவை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கும் தீர்மானம் ஆகும்.
இந்தியா முழுவதும் உள்ள அகில இந்தியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்களை அழைத்து டெல்லியில் கூட்டம் ஒன்று நடத்தி இத்தீர்மானத்திற்கு அவர்களின் ஆதரவையும் பெறுவதின் மூலம் மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கவும், இந்தியா முழுவதும் இந்தப் பிரச்சினைக்கு ஆதரவு திரட்டவும் வழிவகுக்கும்.
எனவே இந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளுமாறு முதல்வர் ஜெயலலிதாவை வேண்டிக்கொள்கிறேன் என்று நெடுமாறன் கூறியுள்ளார்.