மீஞ்சூர் அருகே ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது: உயிர்சேதம் இல்லை
மீஞ்சூர்: பாட்னாவில் இருந்து சென்னை வழியாக திருவனந்தபுரம் செல்லும் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் மீஞ்சூர் அருகே தடம்புரண்டது. இதில் பலர் காயம் அடைந்தனர்.
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து சென்னை வழியாக திருவனந்தபுரம் செல்லும் ரப்திகார் எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 1 மணி அளவில் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருக்கையில் கடைசி 2 பெட்டிகள் தடம்புரண்டன. இதில் அந்த 2 பெட்டிகளில் இருந்தவர்களில் பலர் காயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் அனந்தராமன், பாதுகாப்பு கமிஷனர் காந்தி, ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு தில்லை நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தடம்புரண்ட பெட்டிகள் துண்டிக்கப்பட்டு, அதில் இருந்த பயணிகள் வேறு பெட்டிகளுக்கு மாற்றப்பட்டனர். பின்னர் ரயில் சென்னை சென்ட்ரலை வந்தடைந்தது.
இந்த விபத்தால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் விரிசல் இருப்பதைக் கவனிக்காமல் சென்றதால் ரயில் தடம்புரண்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. தண்டவாளம் சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இன்று பிற்பகல் அந்த பாதையில் மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.