சென்னையில் காய்கறி விலை திடீர் உயர்வு!
சென்னையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காய்கறி விலை குறைந்து, அனைத்து காய்கறிகளும் கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்கப்பட்டன. தற்போது கோடை காலம் முடிந்து மழை பெய்ய ஆரம்பித்து விட்டதால் அவ்வப்போது காற்றும் பலமாக வீசுகிறது.
இதனால் பூக்கள் உதிர்ந்து உற்பத்தி குறைந்ததால் மீண்டும் காய்கறி விலை ஏறத் தொடங்கி விட்டது. சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பீன்ஸ் கிலோ ரூ.16 முதல் ரூ.20 வரை விற்கப்பட்டது. ஆனால் இன்று கிலோ ரூ.50க்கு பீன்ஸ் விற்கப்பட்டது.
இதே போல் தக்காளி கிலோ 5 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் இன்று 1 கிலோ 10 ரூபாய்க்கு விற்கிறார்கள். இதே போல் அவரைக்காய் கிலோ ரூ.14 முதல் ரூ.16 வரை கிடைத்து வந்தது. ஆனால் இன்று கிலோ ரூ.30க்கு உயர்ந்து விட்டது.
கேரட் ரூ.12-ல் இருந்து 14 ஆக விற்கப்படுகிறது. கத்தரிக்காய் ரூ.7-ல் இருந்து ரூ.10 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் வெண்டைக்காய் ரூ.20-ல் இருந்து ரூ.25 ஆக விற்கப்படுகிறது. புடலங்காய் கிலோ ரூ.35-க்கு உயர்ந்துள்ளது.
வெளியூர்களில் இருந்து காய்கறி வருவது குறைந்துள்ளதால் கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று அனைத்து காய்கறிகளும் அதிக விலைக்கு விற்கப்பட்டன.