ஸ்வான், யூனிடெக் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட அதிகாரிகளை மிரட்டினார் ராசா-சிபிஐ
டெல்லி: 2ஜி லைசென்ஸ் விவகாரத்தில் ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவும், அவரது உயர் மட்ட அதிகாரிகளும், பிற அதிகாரிகளை நெருக்கி, மிரட்டி, நிர்ப்பந்தம் செய்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது.
ஜேபிசி விசாரணைக்கு ஆஜரானபோது இதுகுறித்த விவரங்களை சிபிஐ இயக்குநர் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார்.
ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்று ராசாவும், அவரது ஆதரவு உயர் அதிகாரிகளும் தீவிரமாக செயல்பட்டனர். தங்களுக்குக் கீழ் உள்ள அதிகாரிகளுக்கும் அவர்கள் இதை கண்டிப்புடன் கூறியிருந்தனர். சிலரை மிரட்டவும் செய்தனர். பலரை நிர்ப்பந்தப்படுத்தியுள்ளனர்.
ஸ்வான் டெலிகாமுக்கு முக்கியத்துவம் தராமல், முன்னுரிமை அடிப்படையில், டாடா டெலிசர்வீஸ் நிறுவனத்தின் கோப்புகளை தயாரித்த இரு அதிகாரிகளை ராசாவின் தனிச் செயலாளர் சந்தோலியாவின் உத்தரவின்பேரில், தொலைத் தொடர்புத்துறை செயலாளராக இருந்த சித்தார்த் பெஹுரியா இடமாற்றம் செய்தார்.
அதேபோல அப்போது ஒயர்லெஸ் பிரிவுக்கான ஆலோசகராக இருந்த ஆர்.பி. அகர்வால், கடுமையாக மிரட்டப்பட்டார். கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறி அவரை மிரட்டியுள்ளனர். இதையடுத்து டெல்லி சர்க்கிளுக்கு ஸ்வான் நிறுவனத்திற்கு லைசென்ஸ் வழங்கும் உத்தரவை அவர் மேற்கொள்ள நேரிட்டது. இதை பின்னர் பெஹுரியாவும், ராசாவும் ஒப்புதல் கொடுத்தனர்.
டாடா டெலிசர்வீஸ் நிறுவனத்திற்கு 2ஜி லைசென்ஸ் போகக் கூடாது என்பதில் ராசா உள்ளிட்டோர் மிகவும் தீவிரமாக இருந்துள்ளனர். இதுதொடர்பாக பெரும் சதி வேலைகளிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
கொள்கை அளவில் 20 சர்க்கிள்களில் 2ஜி தொழில்நுட்பத்தைப் பெற டாடா டெலிசர்வீஸ் நிறுவனத்திற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும் டாடா நிறுவனம், அனைத்து நிபந்தனைகளும், விதிமுறைகளையும் பூர்த்தி செய்து காத்திருந்தது.
இந்த நிலையில், திடீரென டாடா டெலிசர்வீஸ் நிறுவனத்தின் கோப்புகளைக் காணவில்லை என்று கூறிய தொலைத் தொடர்புத்துறை மீண்டும் மார்ச் 25ம் தேதிக்குள் (2008ம் ஆண்டு) புதிதாக விண்ணப்பிக்குமாறு டாடாவுக்கு உத்தரவிட்டது. ஆனால் ஸ்வான் நிறுவனத்திற்கும், யூனிடெக் நிறுவனத்திற்கும் அதற்கு முன்பாகவே 2ஜி லைசென்ஸை கொடுத்து முடித்து விட்டனர் என்று கூறியுள்ளார் சிங்.