திமுகதான் தமிழக சட்டசபைத் தேர்தல் தோல்விக்குக் காரணம்-காங். பரபரப்பு புகார்
டெல்லி: தமிழக சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு திமுக தான் முக்கியக் காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சந்தேஷ் தலையங்கம் தெரிவித்துள்ளது.
திமுக உயர் நிலை செயல் திட்டக் குழு கூடியுள்ள நிலையில் இந்த தலையங்கத்தை காங்கிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது பரபரப்பைக் கூட்டியுள்ளது.
அத்தோடு நில்லாமல் கூட்டணிக் கட்சிகள் செய்யும் தவறுகளுக்கு காங்கிரஸ் தண்டிக்கப்படக் கூடாது. எனவே தென் மாநிலங்களில் காங்கிரஸ் தனது உத்திகளை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கூட்டணியை மாற்ற காங்கிரஸ் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. திமுக எந்த முடிவை எடுத்தாலும் அதை சந்திக்கத் தாங்கள் தயார் என்பதையும் சூசகமாக காட்டியுள்ளது காங்கிரஸ்.
இன்று வெளியானது ஏன்?
அதை விட முக்கியமாக திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெறும் இன்று தனது தலையங்கத்தை காங்கிரஸ் வெளியிட்டிருப்பது அதன் குசும்புத்தனத்தைக் காட்டுவதாக கருதப்படுகிறது.
இத்தனை நாட்களாக தேர்தல் தோல்விக்கு யார் காரணம் என்பதைக் கூறாமல் வாயை மூடி மற்றவர்கள் பேசுவதை வாய் பார்த்துக் கொண்டிருந்த காங்கிரஸ், திமுக தனது முக்கிய முடிவுக்காக கூட்டத்தைக் கூட்டிய நாளன்று தலையங்கத்தில் இப்படிக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேஷ் தலையங்கச் செய்தி கூறுவதாவது:
திமுகவின் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலே காரணம்!
தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கூட்டணிக்குப் பாதகமாக அமைந்ததற்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரமே காரணம். இதன் காரணமாகத்தான் இந்த மாநிலங்களில் இருந்து வந்த காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சிகளை பிற கட்சிகளிடம் நாம் பறி கொடுக்க நேரிட்டது.
தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தனது உத்திகளை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. கூட்டணிக் கட்சிகளின் தவறுகளுக்காக தனது ஓட்டு வங்கிகளை காங்கிரஸ் கட்சி இழப்பது நியாயமல்ல.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் திமுகவைச் சேர்ந்தவர்களுக்குத் தொடர்பு இருந்ததால் மக்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டது. அது கூட்டணியைப் பாதித்தது.
ஒரு திமுக அமைச்சரால் நாட்டுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டதாக எழுந்த பிரசாரத்தின் விளைவாக மக்களிடையே ஏற்பட்ட பெரும் கோப அலையால், தமிழக ஆளுங்கட்சி (திமுக) தேர்தல் பிரசாரத்தின் போது மேற்கொண்ட மிகப் பெரிய அளவிலான தேர்தல் பணிகளுக்குப் பலன் இல்லாமல் போய் விட்டது.
மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சட்டம் தனது கடமையைச் செய்ய அனுமதித்தது. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சி தான் இழந்த பெருமையை, புகழை மீண்டும் பெற முழு வீச்சில் பாடுபட வேண்டியது அவசியமாகும். கட்சியை அடிமட்ட அளவிலிருந்து வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
ஊழல் புகார்கள் தொடர்பாக விசாரணை அமைப்புகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளன. அதில் கூட்டணிக் கட்சியினர் சிலர் மீதும் விசாரணை நடந்தது வருகிறது. இது பொதுமக்களிடையே காங்கிரஸுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எவராக இருந்தாலும், எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் நீதி நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியுடன் உள்ளது. சட்டத்தின் கடமையில் காங்கிரஸ் குறுக்கிடாது என்று கூறியுள்ளது அந்த தலையங்கம்.
தலையங்கும் எழுதும் காங்கிரஸ் சந்தேஷின் எடிட்டோரியல் குழுவில் இரண்டு உறுப்பினர்கள் உள்ளனர். ஒருவர் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித். இன்னொருவர் சர்வஜித் சிங்.
காங்கிரஸ் கட்சியின் இந்த தலையங்கம், அதுவும் இன்று வெளியான இத்தலையங்கம் திமுகவினர் மத்தியில் புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.