இன்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்-கூட்டணி முறியுமா?
சென்னை: சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் இன்று கூடுகிறது. கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காமல் திஹார் சிறையில் அடைபட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியுடனான உறவு குறித்து இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.
திமுக, காங்கிரஸ் இடையிலான உறவு கிட்டத்தட்ட முடியும் தருவாயை நெருங்கி விட்டது. யார் முதலில் குட்பை சொல்வது என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது.
இந்த நிலையில் கனிமொழி விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளார். கனிமொழி சிறையில் வாட மத்திய அரசுதான் காரணம் என்று பகிரங்கமாகவே அவர் குற்றம் சாட்டினார்.
இந்தப் பின்னணியில் இன்று திமுகவின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் இக்கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடக்கிறது.
சமீபத்தில் தனது பிறந்தநாளின்போது தொண்டர்களுக்கு உங்களது செய்தி என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, கூடா நட்பு கேடாய் முடியும் என்று தெரிவித்தார் கருணாநிதி. இதுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியைக் குறிப்பிட்டுத்தான் இவ்வாறு கருணாநிதி கூறியதாக சர்ச்சை வெடித்தது.
இந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் கூடா நட்பை ரத்து செய்யும் முடிவை திமுக எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்றைய கூட்டத்தில் இரண்டு முடிவுகளில் ஒன்றை திமுக எடுக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஒன்று மத்திய அமைச்சர்களை விலக்கிக் கொண்டு, வெளியிலிருந்து மத்திய ஆட்சிக்கு ஆதரவு தருவது. 2வது, ஒட்டுமொத்தமாக காங்கிரஸுடனான கூட்டணியை விட்டு விலகி விடுவது.
அல்லது இப்படி எந்த முடிவையும் எடுக்காமல் மேம்போக்கான முடிவை திமுக எடுக்கவும் சாத்தியம் உள்ளது. காரணம், கடந்த உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தின்போது அப்படித்தான் காங்கிரஸை கடுமையாக சாடப் போகிறார்கள் என்று எதிர்பார்த்தபோது அப்படி எதுவும் நடக்காமல் பொத்தாம் பொதுவான முடிவுகளை எடுத்துக் கூட்டத்தை முடித்துக் கொண்டார்கள்.
இருப்பினும் இன்றைய கூட்டத்தில் காங்கிரஸ், கூட்டணி, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு, கனிமொழி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே தெரிகிறது.
பிரதமருடன் டி.ஆர்.பாலு திடீர் சந்திப்பு:
இந் நிலையில் திமுக எம்பியும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு நேற்று மாலை திடீரென பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
சென்னையில் இன்று நடக்கும் திமுக உயர்நிலை குழுவின் அவசரக் கூட்டத்தின் பின்னணி குறித்து அவர் விவரித்ததாகத் தெரிகிறது.
மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவது என திமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று உளவுப் பிரிவினர் தனக்குத் தகவல் குறித்து டி.ஆர்.பாலுவிடம் பிரதமர் விளக்கம் கேட்டதாகத் தெரிகிறது.
ஆனால், இது இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் விவரம் கேட்டதாகவும் அதற்கு விளக்கம் அளித்ததாகவும் கூறியுள்ளார் பாலு.