உங்கள் பிராவிடண்ட் பண்ட்டில் எவ்வளவு பணம் இருக்கு?: ஆன்-லைனில் பார்க்கலாம்
முன்பெல்லாம் பணியிலிருந்து ஓய்வு பெறுவோர் பிராவிடண்ட் பண்ட் பணத்தை வாங்குவதற்குள் உயிரே பாதி போய்விடும். ஏகப்பட்ட பார்மாலிட்டீஸ், விதிமுறைகளைச் சொல்லி ஓய்வு பெற்றவரை அலையோ அலை என்று அலைய விட்டு உயிரை எடுப்பார்கள். தரகர்கள்-ஊழியர்கள் கூட்டு சேர்ந்து கொண்டதால் லஞ்சமும் தலைவிரித்தாடியது.
ஆனால், கடந்த பல ஆண்டுகளாக நிலைமை மாறிவிட்டது. ஓய்வு பெற்ற ஒருவர் 3 மாதம் கழித்து தனது பிராவிடண்ட் பண்ட் பணத்தைக் கோரி விண்ணப்பத்தை தாக்கல் செய்யலாம். இந்த விண்ணப்பம் தாக்கலான 30 நாட்களுக்குள் அவரது கைக்கு பணம் போய்ச் சேர வேண்டும் என்ற அதிரடியான விதியை யாரோ ஒரு புண்ணியவான் அதிகாரி அமலாக்கினார். மேலும் இதை கட்டாயமான விதியாகவும் ஆக்கிவிட்டுப் போனார்.
அதிலிருந்து பி.எப். அலுவலகங்களில் தரகர்களின் கொட்டமும் அடங்கியது. லஞ்சமும் ஓரளவுக்கு (முற்றிலும் அல்ல) ஒழிந்துவிட்டது. அரசு அலுவலகங்களில் சிறப்பான சேவை வழங்கும் அலுவலகங்களில் இதுவும் ஒன்றாகிவிட்டது.
ஆனால், இந்த பாராட்டு எல்லாம் பைனல் செட்டில்மெண்ட்டுக்கு மட்டுமே. இடையில் போய் பி.எப்பில் லோன் எடுக்கவோ, அல்லது உங்கள் பி.எப். கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவோ முயன்றால் அது அவ்வளவு எளிதல்ல.
பியூனில் ஆரம்பித்து கிளர்க், சூப்பிரண்ட் என மேஜை மேஜையாக ஓடி ஓடி வெறுத்துப் போய்விடும். இந் நிலையில் விரைவில் இந்தப் பிரச்சனைக்கும் விடிவு கிடைக்கப் போகிறது.
வரும் ஜூலை 1ம் தேதி பி.எப்பில் கணக்கு வைத்திருப்போர் அனைவரும் அந்த அலுவலகத்தின் இணையத்தளத்தில், தங்களது கணக்கு விவரத்தை முழுமையாக பார்க்கலாம். இத் தகவலை பிராவிடண்ட் பண்ட் இணை ஆணையர் கஞ்சன் ராய் தெரிவி்த்தார்.
பி.எப் கணக்கில் நீங்கள் செலுத்திய தொகை, உங்களது அலுவலகம் செலுத்திய அவர்களது பங்குத் தொகை, மொத்தப் பணம் என அனைத்து விவரங்களையும் பார்க்க முடியுமாம்.
இதன்மூலம் நாட்டில் பி.எப்பில் பணம் செலுத்தும் 5 கோடி ஊழியர்கள் பயனடைவர்.
இப்போதுள்ள பி.எப். அக்கெளண்ட் எண்ணை unique identification number ஆக மாற்றவுள்ளனர். இந்த எண் அந்த அக்கெளண்ட் எண்ணுக்கு சொந்தமான ஊழியருக்கு மட்டுமே தெரிவிக்கப்படும். இதன்மூலம் அந்த ஊழியர் மட்டுமே தனது பி.எப் கணக்கை பார்க்க முடியும்.