திமுகவுடன் கூட்டணி: காங்கிரசின் 'டபுள் டாக்'!
நேற்று நடந்த திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு அவசரக் கூட்டத்தில் காங்கிரசுடனான உறவு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என செய்திகள் வெளியாகின. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவு தொடரும் என்று திமுக தீர்மானம் போட்டது.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன்,
திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும். நீண்ட காலமாக நாங்கள் இருவரும் ஒரே கூட்டணியில் உள்ளோம். இப்போதுள்ள அதே உணர்வுடன் உறவு தொடரும். 2ஜி விவகாரம் கூட்டணியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இனியும் பாதிப்பு வராது.
இந்த வழக்கு விசாரணையில் திமுகவுக்கு, காங்கிரஸ் உதவி செய்யவில்லை என்று தான் அதிருப்தியடையவில்லை என கருணாநிதியே தெரிவித்திருப்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்றார்.
அதே போல இன்னொரு செய்தித் தொடர்பாளரான மனீஷ் திவாரி கூறுகையில், கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை. மத்திய அரசில் தொடர்வதை திமுக தெளிவாக்கிவிட்டது என்றார்.
திமுக மீது பாய்ந்த காங்கிரஸ் பத்திரிக்கை:
ஜெயந்தி நடராஜனும் திவாரியும் இவ்வாறு கூறினாலும் தமிழக சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு திமுக தான் முக்கியக் காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சந்தேஷ் தலையங்கம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக உயர் நிலை செயல் திட்டக் குழு கூடிய தினத்தன்று இந்த தலையங்கத்தை காங்கிரஸ் நாளிதழ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.