தேமுதிகவுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்தது-விஜயகாந்த் மகிழ்ச்சி
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
19.5.2011 அன்று தே.மு.தி.க. சார்பில் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திற்கு அங்கீகாரம் கோரி கடிதம் அனுப்பப்பட்டது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றதையும், சுமார் 30 லட்சம் வாக்குகள் பெற்றதையும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
1968-ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு மற்றும் ஒப்படைப்பு ஆணையின்படி ஒரு மாநில கட்சி அங்கீகாரம் பெறுவதற்குரிய தகுதிகளை தே.மு.தி.க. பெற்றுள்ளதால் அந்த அங்கீகாரம் கோரப்பட்டது.
தேர்தல் ஆணையம் இந்த கடிதத்தை பரிசீலித்து தே.மு.தி.க.விற்கு அங்கீகாரம் வழங்கி 10.6.11 அன்று ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி தே.மு.தி.க. தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாகவும், அதற்கு முரசு சின்னம் நிரந்தரமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கட்சி ஆரம்பித்த விஜயகாந்த் அரசியலில் தனி சக்தியாக உருவெடுத்தார். இருப்பினும் வாக்குகளைப் பிரித்தாரே தவிர திமுக, அதிமுகவைப் போல ஒரு பெரும் சக்தியாக தேமுதிக மாறவில்லை. மாறாக வாக்குகளைப் பிரிக்கும் சக்தியாகவே அது தொடர்ந்து திகழ்ந்து வந்தது.
இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவை தனது அணியில் சேர்த்து அக்கட்சிக்கு 2வது முக்கிய கட்சியாக அங்கீகாரம் அளி்த்து 41 இடங்களை ஒதுக்கினார் ஜெயலலிதா. இதன் மூலம் அதிமுகவின் பலமும் தேமுதிகவுக்குக் கிடைத்து இன்று அரசியலில் அங்கீகாரம் பெற்றுள்ள கட்சியாக தேமுதிக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியலைப் பொறுத்தவரை பல கட்சிகளுக்கும் அரசியல் ரீதியான அங்கீகாம் ஜெயலலிதா மூலமாகத்தான் கிடைத்துள்ளது என்பது முக்கியமானது. பாமக, மதிமுக, பாஜக என பல கட்சிகளும் புத்துயிர் பெற்றது, அங்கீகாரம் பெற்றது ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்ததன் மூலமாகத்தான் என்பது நினைவிருக்கலாம்.
அதேபோல சட்டசபைக்குள் நுழைவது என்பது கனவில் மட்டுமே சாத்தியம் என்ற நிலையில் இருந்த சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட குட்டிக் கட்சிகளும் இன்று சட்டசபையில் உறுப்பினர்களைப் பெற்றிருப்பதற்கும் அதிமுகதான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.