கார் பருவ நெல் சாகுபடி: பாபநாசம் அணை இன்று திறப்பு
நெல்லை: கார் பருவ நெல் சாகுபடிக்காக பாபநாசம் அணை இன்று திறக்கப்படுகிறது. முதல் கட்டமாக நான்கு கால்வாய்களில் மட்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயம் பிரதான தொழிலாகும். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாபநாசம் அணையின் மூலமே இரண்டு மாவட்டங்களிலும் விவசாயம நடந்து வருகிறது. இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் கார் பருவ சாகுபடிக்கு ஜூன் மாதம் 1-ம் தேதி பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர் மட்டம் 24.60 அடியாக இருந்தது. அதன் பின்னர் மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.
நேற்றைய நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 57.85 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 529 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 604 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில் கார்பருவ நெல் சாகுபடிக்காக பாபநாசம் அணை இன்று காலை 11 மணிக்கு திறக்கப்படுகிறது. கலெக்டர் நடராஜன் தண்ணீரை திறந்து விடுகிறார்.
முதல் கட்டமாக வடக்கு, தெற்கு, கோடை மேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், கன்னடியன் கால்வாய் ஆகிய கால்வாய்களில் மட்டும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.