தமிழக சட்டசபை தேர்தல்: செலவு கணக்கை காட்டாத 223 வேட்பாளர்கள்
சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 223 பேர் இன்னும் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை சமர்பிக்கவில்லை.
சட்டசபைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 13ம் தேதி நடந்தது. அதில் மொத்தம் 2,748 பேர் போட்டியிட்டனர். இவர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை சமர்ப்பிக்க ஜூன் 13ம் தேதி (வரை காலக்கெடு அளிக்கப்பட்டிருந்தது.
இவர்களில் 2,525 வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவுக் கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர். ஆனால், 223 பேர் இன்னும் கணக்குகளை சமர்ப்பிக்கவில்லை. இவர்களில் பெரும்பாலானோர் சுயேட்சை வேட்பாளர்கள் ஆவர்.
இது குறித்து மாநில தலைமைத் தேர்தல் ஆணையர் பிரவீண்குமார் கூறுகையில்,
கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் முறைப்படி தங்களது செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்து விட்டனர். இந்த செலவு கணக்கு விவரங்கள், தேர்தல் செலவு பார்வையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் இவை இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்படும்.
அவர்கள் இந்த விவரங்களை ஆய்வு செய்வர். தவறுகள் இருந்தால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை அவர்களே முடிவு செய்வார்கள். தேர்தல் செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நாட்டின் எந்தப் பகுதியிலும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடுவதிலிருந்தும் தடை விதிக்கப்படும்.
சென்னையில் போட்டியிட்ட 274 வேட்பாளர்களில் 10 பேர் மட்டுமே செலவு கணக்கை இதுவரை தாக்கல் செய்யவில்லை. இவர்கள் அனைவரும் சுயேட்சைகள் என்றார்.