அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் செலவு ரூ. 5.48 லட்சம்
சென்னை: அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் செலவாக ரூ. 5.48 லட்சம் என்று தேர்தல் ஆணையத்திடம் கணக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட்ட அனைவரும் தங்களது தேர்தல் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இதைச் செய்யத் தவறினால் அவர்கள் மீண்டும் தேர்தலில் நிற்கத் தடை விதிக்கப்படுவார்கள்.
அந்த வகையில் அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு வேட்பாளர்களும் தங்களது தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.
நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான் தேர்தல் பிரசாரத்தின்போது ரூ. 5.48 லட்சம் செலவு செய்ததாக கணக்குக் காட்டியுள்ளார். தேர்தலில் ஒரு வேட்பாளர் ரூ. 16 லட்சம் வரை செலவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதில் பாதிக்கும் கீழேதான் பழனிச்சாமி செலவு செய்துள்ளதாக கணக்குக் காட்டியுள்ளார்.
வேட்பாளர்கள் தங்களது செலவுக் கணக்கை சமர்ப்பிக்க நேற்றுடன் கடைசி நாள் முடிவடைந்தது.