'சமச்சீ்ர் அரசியல்': ஸ்கூலுக்கு வரலாம்..ஆனா படிக்க வேண்டாம்!
இதனால் பள்ளிகள் திறந்தாலும் 'விடுமுறை' தொடர்கிறது.
அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி அளிக்கும் வகையில் திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. முதல் கட்டமாக 1 மற்றும் 6ம் வகுப்புகளில் கடந்த ஆண்டே இந்த சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. மற்ற வகுப்புகளில் இந்த கல்வி ஆண்டு (2011-12) முதல் சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான புத்தகங்களும் அச்சிடப்பட்டன. சமச்சீர் கல்வி பற்றி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சியும் அளிக்கப்பட்டது.
ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் கல்வியை ரத்து செய்தது. இதற்குக் காரணமாக சொல்லப்பட்டது.... சமச்சீர் கல்வித் திட்ட பாடப் புத்தகங்கள் தரமானதாக இல்லை என்பது.
அதில் மாற்றங்கள் கொண்டு வந்து மேம்படுத்த வேண்டியிருப்பதால் இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை தொடர முடியாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக சட்ட மசோதா ஒன்றையும் சட்டசபையில் நிறைவேற்றியது.
அரசின் இந்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல் செய்தது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை கால நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், சுதந்திரகுமார் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து தீர்ப்பை வழங்கினர். தங்களது தீர்ப்பில்
1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி தொடர்ந்து அமல்படுத்தப்பட வேண்டும். அதை இடையில் நிறுத்தினால் குழப்பம் ஏற்படும்.
அதே நேரத்தில் 2 முதல் 5-ம் வகுப்பு வரையும், 7 முதல் 10ம் வகுப்பு வரையும் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழு நியமிக்கப்படுகிறது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இந்த நிபுணர் குழுவின் தலைவராக இருப்பார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், பள்ளிக் கல்வி வாரிய அதிகாரிகள் 2 பேர், தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் 2 பேர் உள்பட 9 பேர் இந்த குழுவில் இடம் பெறுவார்கள்.
இந்த நிபுணர் குழு தனது அறிக்கையை 2 வார காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்னர் நீதிமன்றம் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி தினமும் விசாரணை நடத்தி ஒரு வார காலத்துக்குள் தீர்ப்பளிக்க வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை 1 மற்றும் 6ம் வகுப்பு தவிர மற்ற மாணவர்களுக்கு அடுத்த 3 வார காலத்துக்கு பாடம் நடத்த வேண்டாம் என உத்தரவிட்டனர்.
குழப்பத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள்:
இந்தத் தீர்ப்பில் மிகவும் பாதிக்கப்படுவோர் 10ம் வகுப்பு மாணவர்கள் தான். இந்த ஆண்டு சமச்சீர் கல்வி பிரச்சனையால் ஏற்கனவே பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இப்போது பள்ளிகள் திறந்தாலும் பாடங்களை ஆரம்பிக்க மேலும் 3 வாரம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கோடை விடுமுறையின்போது சமச்சீர் கல்வி பாடத்தை படித்த மாணவர்கள், அதிமுக அரசின் திடீர் முடிவால் மீண்டும் பழைய பாடத் திட்டத்தை படிக்க ஆரம்பித்தனர்.
இப்போது நீதிமன்ற உத்தரவால் எந்த பாடத்தைப் படிப்பது என்ற குழப்பத்தில் மாணவர்கள் ஆழ்ந்துள்ளனர்.
1, 6ம் வகுப்புக்கும் பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை:
வழக்கமாக பள்ளிகள் திறந்த அன்றே மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு விடும். 1 மற்றும் 6ம் வகுப்புக்கு பாடத் திட்டத்தில் மாற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்த போதிலும் அந்த வகுப்பு மாணவர்களுக்கு இன்று பாட புத்தகம் வினியோகிக்கப்படவில்லை.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 1, 6ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது. ஆனால், அரசு அறிவிப்பு எதுவும் வரவில்லை என்பதால் வினியோகிக்கப்படவில்லை என்றார்.