தமிழகம் முழுவதும் விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. இருப்பினும் தமிழக அரசின் உத்தரவுப்படி ஜூன் 15ம் தேதிக்கு பள்ளிகள் திறப்பு தள்ளிப் போடப்பட்டது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன.
நீண்ட விடுமுறையை ஜாலியாக என்ஜாய் செய்த பள்ளி மாணாக்கர்கள் இன்று சோர்வு நீங்கி, புது யூனிபார்முடன், புதுப் பை, புது லஞ்ச் பாக்ஸ் சகிதமாக பள்ளிக்கு உற்சாகமாக வந்ததைக் காண முடிந்தது.
ஆனால் மாணவர்களுக்கு புத்தகத்தில்தான் குழப்பம். சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் புதிய உத்தரவை நேற்று பிறப்பித்தது. அதன்படி 1 மற்றும் 6 ஆகிய இரு வகுப்புகளுக்கு மட்டும் இந்த ஆண்டு சமச்சீர் கல்வி முறைப்படி பாடம் நடத்தப்படும். பிற மாணவர்களுக்கும் இதை நடைமுறைப்படுத்துவதா, இல்லையா என்பது குறித்த தீர்ப்பு இன்னும் 3 வாரங்களில் வெளியாகும். அதுவரை அவர்களுக்கு புத்தகத்தை வைத்துப் பாடம் நடத்தப்பட மாட்டாது.
எனவே இந்த மாணவர்களுக்கு புத்தகங்களை வைத்துப் பாடம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்குப் பதில் மூன்று வார காலத்திற்கு இவர்களுக்குப் பொதுவான முறையில் பாடம் நடத்தப்படும்.
செயல்முறை விளக்கம்
இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் தரம் குறைவாக இருப்பதால் மாணவர்களின் கல்வி நலன் கருதி இத்தரத்தை ஆராய்வதற்காக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைப்படி கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த இடைக்கால உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு செய்த மேல் முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் வல்லுனர்கள் குழு அமைத்து சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பாட புத்தகங்களின் தரத்தை ஆராய உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தப்படி 15-6-2011 அன்று திட்டமிட்டப்படி எல்லா பள்ளிக்கூடங்களும் திறக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். 2005-ம் ஆண்டு தேசிய கலை திட்ட வடிவமைப்பு மற்றும் 2009-ம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் ஆகியவற்றில் குழந்தைகளை மையப்படுத்தி அவர்கள் எளிமையான முறையில் மகிழ்ச்சியுடன் கல்வி கற்கவும், அதன் மூலம் அவர்கள் மனப்பாடம் செய்யும் முறையில் இருந்து மாறுபட்டு சொந்தமாக சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும் வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற பின் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன்படி 2005-ம் ஆண்டு தேசிய கலை திட்ட வடிவமைப்பு மற்றும் 2009-ம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் ஆகியவற்றில் குறிப்பிட்டு உள்ளப்படி, கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு, "குழந்தையை மையப்படுத்திய இணைப்பு பயிற்சி வகுப்புகள் அறிமுகப்படுத்தபட வேண்டும்'' என்ற முறையை எல்லா வகுப்புகளிலும் இந்த கல்வி ஆண்டில் ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்த உள்ளது.
பள்ளிக்கூடம் திறக்கும் நாளான 15.6.2011 முதல் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்த திட்டத்தின் படி பாட புத்தகங்களை மையப்படுத்தாமல் மாணவர்களை மையப்படுத்தி செயல்முறை விளக்கங்களை கொண்டு வகுப்பறை நடத்தப்படும். இந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்ட வகுப்புகள் முடியும் தருவாயில் அனைத்து வகுப்புகளுக்கும் தேவையான இலவச பாட புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
ஆகவே, கல்வி நிறுவனங்கள் எவ்வித குழப்பத்திற்கும் இடம் கொடுக்காமல் நல்ல முறையில் இந்த கல்வியாண்டில் அரசால் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இத்திட்டத்தை கடைப்பிடித்து மாணவர்களுக்கு கல்வி கற்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாணவர்களின் கல்வி நலனில் என்றும் அக்கறை கொண்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அரசு நல்ல முறையில் கல்வி கற்பிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்துள்ள நிலையில் பெற்றோர்களும், மாணவர்களும் எந்த வித குழப்பமும் இன்றி நல்ல முறையில் கல்வி பயிலுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
என்ன சொல்லித் தர முடியும்?
தற்போது 2, 3, 4, 5, 7, 8, 9, 10 ஆகிய வகுப்புகளுக்குரிய மாணவர்களுக்குப் புத்தக்ம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 3 வாரங்களுக்கு இவர்களை வகுப்புகளில் கிட்டத்தட்ட சும்மா உட்கார வைத்திருக்க வேண்டிய நிலை.
எனவே மூன்று வார காலத்திற்கு பொதுவான விஷயங்கள் அதாவது டேபிள்ஸ் எனப்படும் வாய்ப்பாடு, நீதி போதனை, திருக்குறள், அடிப்படைக் கணிதம், இலக்கணம் உள்ளிட்டவை குறித்த மேம்போக்கான முறையில்தான் சொல்லித் தர வேண்டிய நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர்.
இப்படித்தான் அடுத்து வரும் 3 வாரங்களை ஓட்டியாக வேண்டிய நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர்.