அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் புகுந்த விஷ வண்டுகள்-போராடி விரட்டிய தீயணைப்புப் படையினர்
சென்னை: தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டு வளாகத்தில் உள்ள மரத்தில் வசித்து வந்த விஷ வண்டுகளால் பெரும் துயரமாகி விட்டது. இதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து வண்டுகளை விரட்டியடித்தனர்.
கிரீன்வேஸ் சாலையில், அரசு வீட்டில் குடியிருந்து வருகிறார் வைத்திலிங்கம். அந்த வீட்டு வளாகத்தில் உயரமான புங்கை மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தின் மீது விஷ வண்டுகள் திடீரென படையெடுத்து புகுந்து கொண்டன.
மரத்தோடு நிற்காமல் அமைச்சரைப் பார்க்க வருவோரையும் கடிப்பதும், மிரட்டுவதுமாக இருந்தன. இந்த வண்டுகள் தொல்லை பெருகியதால் அமைச்சரின் பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து நேற்று அங்கு வந்த தீயணைப்புப் படையினர், கவச உடையுடன் வண்டுகள் கொட்டமடித்து வந்த மரத்தை ரவுண்டப் செய்தனர். பின்னர் தீப்பந்தம் ஒன்றை வண்டுகள் குடிபுகுந்திருந்த குருவிக் கூட்டுக்குள் வைத்தனர். இதில் ஏராளமான வண்டுகள் கருகிப் போய் விழுந்தன. ஆனால் தப்பிய சில வண்டுகள், அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று வேறு பகுதியை நோக்கிப் பறந்தோடின.
ஒரு வழியாக வண்டுகள விரட்டியடித்த பின்னர் தீயணைப்புப் படையினர் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
இனி அமைச்சரைப் பார்க்க 'பயமில்லாமல்' போகலாம்!