19ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் ஜெயலலிதா-3 நாள் வாக்காளர்களுக்கு நன்றி சொல்கிறார்
சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று திமுகவை ஆட்சியிலிருந்து விரட்டியது. மீண்டும் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதியில் அபார வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆனந்த்தை விட 41,848 வாக்குகள் அதிகம் பெற்று அவர் வென்றார்.
இந்த நிலையில் தன்னைத் தேர்ந்தெடுத்த ஸ்ரீரங்கம் தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி கூறவுள்ளார் முதல்வர். இதற்காக அவர் 19ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார். 3 நாட்கள் தொகுதி முழுவதும் கிராமம் கிராமமாக சென்று அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறார்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
முதல்வர் ஜெயலலிதா வரும் 19, 20 மற்றும் 21-ந் தேதி ஆகிய மூன்று நாட்கள் ஸ்ரீரங்கம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற பேரவை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாக்களித்து, அவரை மகத்தான வெற்றி பெற செய்த ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வரும் 19-ந் தேதி காலை பயணம் மேற்கொள்கிறார்.
முதல் நாள் நிகழ்ச்சியாக 19-ந் தேதி அன்று மாலை நடைபெற உள்ள அரசு விழாவில், ஸ்ரீரங்கம் தொகுதியில் செயல்படுத்தப்பட உள்ள பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான 20-ந் தேதி அன்று அந்தநல்லூர் ஒன்றியத்தில் கிராமந்தோறும் சென்று, வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
அதன்பின்னர் 21-ந் தேதி அன்று மணிகண்டம் ஒன்றியத்தில் கிராமந்தோறும் சென்று, வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். மூன்று நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, 21-ந் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதா சென்னை திரும்புகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பதவியில் அமர்ந்த பின்னர் ஜெயலலிதா முதல் முறையாக ஸ்ரீரங்கம் வருவதால் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அதிமுகவினர் தயாராகி வருகின்றனர். இருப்பினும் ஆடம்பரம் கூடவே கூடாது என்று ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டிருப்பதால் அமைதியான முறையில் அதேசமயம் சிறப்பான வரவேற்புக்கு அதிமுகவினர் தயாராகி வருகின்றனர்.