வட்டி வீதங்களை மீண்டும் உயர்த்தியது ரிசர்வ் வங்கி-வீட்டுக் கடன் வட்டி உயரும்!
இந்த புதிய அறிவிப்பின்படி, ரொக்க இருப்பு விகிதம் மாறவில்லை. அதே 6 சதவீதத்தில் உள்ளது.
ஆனால் ரெபோ ரேட் எனப்படும் வங்கி வட்டி வீதத்தை 7.50 சதவீதமாக உயர்த்தியுள்ளது. புதிதாக உயர்த்தப்பட்ட அளவு 25 புள்ளிகள் அல்லது கால் சதவீதம். ரெபோ ரேட் உயர்ந்துள்ளதால், வங்கிகள் அதிக வட்டிக்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன்கள் பெறும் நிலை உருவாகியுள்ளது.
அடுத்து ரிவர்ஸ் ரெபோ வட்டியையும் உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி. இதன் மூலம் வணிக வங்கிகளிடம் அதிகமாக உள்ள பணத்தை அதிக வட்டி கொடுத்து தன்வசமாக்கிக் கொள்ளும் ரிசர்வ் வங்கி. பணப்புழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கை இது. இந்த வகையில் இதுவரை 6.25 சதவீதமாக இருந்த ரிவர்ஸ் ரெபோ, இப்போது 6.5 சதவீதமாகியுள்ளது.
இதன் மூலம் நாட்டில் பல்வேறு கடன்களுக்கான வட்டிகள் மீண்டும் கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.