கரூர் அருகே லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ. கைது
கரூர்: கரூர் அருகே உள்ள தென்னிலையில் பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் கேட்ட பெண் வி.ஏ.ஓ.வை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், தென்னிலை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி லட்சுமி (55). இவர், அதே பகுதியில், புஞ்சை நிலம் ஒன்றை வாங்கினார். நிலத்தின் பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக, தென்னிலை தென்பாகம் வி.ஏ.ஓ. வசந்தியிடம், லட்சுமி மனு கொடுத்தார்.
பட்டா பெயர் மாற்ற, தனக்கு ரூ 3,000 லஞ்சம் தர வேண்டும் என்று லட்சுமியிடம் வி.ஏ.ஓ. வசந்தி வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத லட்சுமி இது குறித்து திருச்சி மன்னார்புரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் 3,000 ரூபாயை வி.ஏ.ஓ. வசந்தியிடம் லட்சுமி கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் வி.ஏ.ஓ. வசந்தியை கைது செய்தனர்.