வக்கீல் மகன் கொலை வழக்கு-சிபிஐ விசாரணை தொடங்கியது
சென்னை: சென்னையில் வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் கொலை வழக்கை விசாரிக்கத் தொடங்கியுள்ளது சிபிஐ.
சென்னை மேற்கு அண்ணாநகரைச் சேர்ந்தவர் சங்கரசுப்பு. வக்கீலான இவரது மகன் சதீஷ் குமார். வக்கீல் படிப்பை முடித்தவர். ஜூன் 7ம் தேதி இவர் காணாமல் போனார். இவரது பைக் ஐசிஎப் வடக்குக் காலனியில் உள்ள ஏரிக் கரையோரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த தீவிர தேடுதில் ஏழு நாட்களுக்குப் பின்னர் சதீஷின் உடல் ஏரியில் மிதந்தது.
பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சங்கரசுப்பு இந்த வழக்கை சிபிஐக்கு விட வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அதை ஏற்ற உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த வழக்கை திருமங்கலம் போலீஸார் நேற்று சிபிஐ வசம் ஒப்படைத்தனர். வழக்கு தொடர்பான அனைத்து விவரங்கள், ஆவணங்கள், பிரேதப் பரிசோதனை அறிக்கை, வீடியோ உள்ளிட்டவற்றை சிபிஐ அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து சிபிஐ விசாரணை தொடங்கியது. தனது புகாரில், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ரியாசுதீன் ஆகியோர் தான் தனது மகனின் சாவுக்குத் தூண்டுதலாக இருந்தவர்கள் என்று சங்கரசுப்பு கூறியுள்ளார். இதனால் அவர்களிடம் சிபிஐ விசாரணை நடைபெறவுள்ளது.