வீரப்ப மொய்லியுடன் தயாநிதி மாறன் சந்திப்பு
டெல்லி: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லியை டெல்லியில் அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.
ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் சிபிஐயிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், 2001ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை தொலைத்தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது நிறுவன நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டதாகவும், தன்னுடைய நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு விற்குமாறு நிர்பந்தம் செய்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் மலேசிய நிறுவனம் தனது நிறுவனத்தை வாங்கிய பிறகு, அதற்கு தொலைத் தொடர்பு லைசென்ஸை வழங்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து தயாநிதி மாறனிடமும் சிபிஐ எந்த நேரத்திலும் விசாரணை நடத்தும் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் சட்டத்துறை அமைச்சர் மொய்லியை, தயாநிதி மாறன் நேற்று மாலை அவரது அலுவலகத்தில் சென்று சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு 10 நிமிடங்களே நடந்தது.