ரூ 10 கூலி உயர்வு கேட்டு போராட்டத்தில் தொழிலாளர்கள்-பிடிவாதம் பிடிக்கும் முதலாளிகள்
இந்த போரட்டம் குறித்து சிஐடியு மாநில செயலாளர் எம். அசோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விருதுநகரில் 433 எண்ணெய் செக்குகள் உள்ளன. இதில் மொத்தம் 198 தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாக 400 க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
தொழிலாளர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராத சங்கமாக இருந்து வந்துள்ளனர். இதை பயன்படுத்திக் கொண்ட மில் முதலாளிகள் சிலர் கடந்த பல ஆண்டுகளாக தொழிலாளர்களை கசக்கி பிழிந்து வேலை வாங்கி வருகின்றனர்.
ஆனால், இந்த தொழிலாளர்கள் யாருக்கும், பி.எப், இ.எஸ்.ஐ., போனஸ் என எந்த உரிமையும் தருவது இல்லை. வேலை பார்க்கும் போது விபத்து ஏற்பட்டால் கூட எந்த நிவாரணமும் கிடையாது.
ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்த்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என்பது சட்டமாகும். அதுவும் நடைமுறைப்படுத்தவில்லை.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தொழிலாளர் ஆய்வாளர் இன்றி சட்ட விரோதமாக எண்ணெய்புண்ணாக்கு சங்கத்தினருடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
அது மிக, மிக குறைந்த கூலியாகும்.
தற்போது ஏறி வரும் விலைவாசி உயர்வால் நாள் ஒன்றுக்கு 21 மணி நேரம் உழைத்தால் தான் ஒரு நாள் கூலியாக ரூ 150 தருகின்றனர்.
ஆயில்மில் தொழிலாளர்களுக்கு ரூ 10 கூலி உயர்வு கேட்கின்றனர். ஆனால், முதலாளிகள் பிடிவாதம் பிடித்து தர மறுக்கின்றனர்.
இதனால் தொழிலாளர்கள் ஜூன் 12 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட வருவாய் அலுவலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், முதலாளிகள் அடுத்த ஏப்ரல் மாதம் தான் ஒப்பந்தம் போட முடியும் என மறுத்து விட்டனர்.
மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர். அவர் கூலி கட்டுபிடியாகவில்லை எனில் கட்டிட வேலைக்குப் போங்கள் என பொறுப்பின்றி கூறியுள்ளார் என்றார்.