சமச்சீர் கல்வி: தமிழக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு
டெல்லி: சமச்சீர் கல்வி விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை மீறி விட்டதாகக் கூறி அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ஹரீஷ் குமார் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
நடப்புக் கல்வியாண்டில் 1ம் வகுப்புக்கும், 6ம் வகுப்புக்கும் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும் என கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்காக தமிழக தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் குழு அமைக்க வேண்டும். இந்தக் குழு மூன்று வாரங்களில் தங்களது கருத்துகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி 9 பேர் கொண்ட குழுவைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா அமைத்தார்.
இந்நிலையில் உச்ச நீதி்மன்றத்தில் வழக்கறிஞர் ஹரீஷ் குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், 1ம் வகுப்புக்கும், 6ம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை எந்த மாற்றம் செய்யாமல் அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.
ஆனால் 1ம் வகுப்பு, 6ம் வகுப்பு சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் சில குறிப்பிட்ட பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடங்கள் உள்ள பக்கங்களை அதிகாரிகள், ஆசிரியர்கள் கிழித்து வருகின்றனர். இது உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை மீறும் செயல்.
இதற்கு தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கியும், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபிதாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை ஜூலை மாதம் நடக்கும் என்று தெரிகிறது.
பாமக ஆட்சிக்கு வந்தால் ஒழிய...ராமதாஸ்:
இந் நிலையில் சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி பாமக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதால்,
மாணவர்கள் புத்தகமே இல்லாமல் பள்ளிக்குச் செல்லும் அவலநிலை தமிழகத்தில்தான் உள்ளது. சமச்சீர் கல்வியில் அக்கறை இருந்தால், இதை இன்னும் எப்படி செழுமைப்படுத்தலாம் என்று முத்துக்குமரன் குழுவிடமே ஆலோசனைகளைக் கேட்டிருக்கலாம்.
எந்த ஆட்சியாளர்களுக்கும் சமச்சீர் கல்வி மேல் அக்கறை கிடையாது. அவர்கள் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக உள்ளனர். கடந்த அரசு குறைகளோடு இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், இப்போதைய அரசு ஒட்டுமொத்தமாக இதை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
அரசியல்வாதிகள் மட்டுமல்ல; ஊடகங்களும் சமச்சீர் கல்விக்கு எதிராக உள்ளன. சமச்சீர் கல்வி வந்தால் ஏழைகளும், கிராமப்புற மாணவர்களும் நல்ல வேலைகளுக்குப் போட்டியிடுவார்கள் என்ற அச்சமே இதற்குக் காரணம்.
தமிழ் வழிக் கல்வி என்பதில் சென்ற அரசும், இந்த அரசும் தனியார் பள்ளிகளிடம் அடி பணிகின்றன. பாமக ஆட்சிக்கு வந்தாலொழிய இதில் மாற்றம் வராது. பாமக ஆட்சிக்கு வந்தால் தமிழ் வளரும். சமச்சீர் கல்வி வரும். அனைத்துப் பள்ளிகளையும் அரசே ஏற்று நடத்தும் என்றார் ராமதாஸ்.