எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்கிற்கு புற்றுநோய்: வழக்கறிஞர் அறிவிப்பு
கெய்ரோ: எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் வயிற்றுப் புற்று நோயால் அவதிப்படுவதாக அவரது வழக்கறிஞர் பரித் எல் தீப் தெரிவித்துள்ளார்.
ஹோஸ்னி முபாரக்(83) எகிப்து அதிபராக இருக்கையில் அவருக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் புரட்சி வெடித்தது. அவரும் தன்னாள் இயன்ற வரை மக்களை அடக்கி ஒடுக்க முயன்றார். இறுதியில் மக்கள் சக்தி வென்று அவர் அதிபர் பதவியில் இருந்து விலகினார். இந்த போராட்டதின்போது 840 பேரை ராணுவத்தினர் கொன்றனர்.
பதவியில் இருந்து விலகிய பிறகு முபாரக், அவரது மகன்கள் அலா, காமல் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டு மற்றும் கொலை வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முதல்கட்ட விசாரணையின்போது முபாரக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவரை செங்கடல் பகுதியில் உள்ள ஷார்ம் எல் ஷேக் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடல் நிலை சரியில்லாததால் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
விசாரணையை எதிர்கொள்ள முபாரக் தயாராக இருக்கிறாரா என்று கண்டறிய அவரது உடல் நிலை குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அதன்படி முபாரக்கின் வழக்கறிஞர் பரித் எல் தீப் சமர்பித்த அறிக்கையில் முபாரக் வயிற்று புற்று நோயால் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு அவருக்கு பித்தபை அறுவை சிகிச்சை நடந்தபோது அவரது குடலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. இதையடுத்து தற்போது வயிற்றில் புற்று நோய் ஏற்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் அறிக்கை உண்மையல்ல என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணையில் இருந்த முபாரக்கை தப்ப வைக்கத் தான் இந்த நோய் நாடகம் என்கின்றனர்.
முன்னாள் துனிசிய அதிபருக்கு 35 ஆண்டு சிறை:
ஊழல் வழக்கில் துனிசியா முன்னாள் அதிபர் பென் அலிக்கும், அவரது மனைவி லைலாவுக்கும் அந்நாட்டு நீதிமன்றம் தலா 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
துனிசியா அதிபர் ஷின் அல்-அபிடின் பென் அலி பதவிக்காலத்தில் அதிகார துஷ்பிரயோகம், லஞ்ச ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவருக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் மக்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து அவர் பதவி விலகினார். மனைவி லைலா டிராஸ்ல் சியா மற்றும் குடும்பத்துடன் சவுதியில் தஞ்சம் புகுந்தனர்.
அவர்கள் வெளியேறிய பிறகு அரண்மனையில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 125 கோடி மதிப்பிலான பணம், தங்க, வைர நகைகள், போதை மருந்து மற்றும் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக அவரது குடும்பத்தினர் பதுக்கி வைத்திருந்த ரூ. 235 கோடி பணத்தை சுவிட்சர்லாந்து வங்கி முடக்கியது.
இதையடுத்து நாட்டின் பணத்தை ஊழல் செய்து கொள்ளையடித்ததற்காக அலி மீதும், அவரது மனைவி மீதும் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த 5 மாதங்களாக நடந்தது. ஆனால் அலியோ, அவரது மனைவியோ ஒருமுறை கூட ஆஜராகவில்லை.
நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஊழல் செய்த அலிக்கும், அவரது மனைவி்க்கும் தலா 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அலிக்கு ரூ. 135 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இது தவிர போராட்டத்தின்போது மக்கள் உடைமைகளை சேதப்படுத்தியதற்காக 5 கோடி தினார் அபராதம் விதிக்கப்பட்டது.
போதைப் பொருள் மற்றும் ஆயுதப் பதுக்கல் வழக்கின் தீர்ப்பு வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றங்களை வக்கீல் மூலம் மறுத்துள்ளார். அலியும், அவரது மனைவியும் நாடு திரும்பி இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.