ஆந்திராவில் தாமதமாக வந்த மணப்பெண்ணை விரட்டியடித்த மணமகன்
ஆந்திர மாநிலம் திருச்சானூர் வி.வி.நகரைச் சேர்ந்தவர் சுப்பாராயுடு(28). இவருக்கும் கடப்பா அருகே உள்ள சோடூரைச் சேர்ந்த பிரியாவுக்கும் (பெயர் மாற்றம்) திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கடந்த சனிக்கிழமை இரவு திருமண வரவேற்பு, மறுநாள் காலையில் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.
திருமண வரவேற்பு சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடத்த தீர்மானித்தனர். அதற்கேற்ப மாப்பிள்ளை வீட்டார் முதலில் திருமண மண்டபத்திற்கு வந்துவிட்டனர். ஆனால் பெண் வீட்டாரைக் காணவில்லை. அவர்கள் மண்டபத்திற்கு மிகவும் தாமதமாக இரவு 11 மணிக்கு வந்தனர்.
மாலை முதல் இரவு வரை பெண் வீட்டார்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த மாப்பிள்ளை வீட்டார் ஆத்திரம் அடைந்தனர். தாமதமாக வந்த மணப்பெண்ணை மணக்க மணமகன் மறுத்துவிட்டார். இதனால் இரண்டு வீட்டார்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மணப்பெண்ணின் உறவினர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக திருப்பதி ரூயா மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதையடுத்து நேற்று காலை 11 மணியளவில் திருச்சானூர் காவல் நிலையம் வந்த பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் மீது புகார் கொடுத்தனர். அவர்கள் புகாரின்பேரி்ல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பேச்சுவார்த்தை நடத்தினால் அந்த மாப்பிள்ளையை மணந்து கொள்ள சம்மதமா என்று போலீசார் அந்தப் பெண்ணைக் கேட்டனர். அதற்கு அவர் தாமதமாக வந்ததற்கே அடித்து விரட்டுகின்றனர். அவரை நான் எப்படி திருமணம் செய்துகொள்ள முடியும் என்றார்.
இதையடுத்து இரு தரப்பினரையும் போலீசார் சமாதானம் செய்து வைத்து அனுப்பினர்.