அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராகும் நிருபமா ராவ்?
இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு வேண்டிய பணிகளை செய்து கொடுத்ததற்கு நன்றிக் கடனாக அவருக்கு இந்தப் பதவி தரப்படும் என்று தெரிகிறது.
இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது அந் நாட்டுக்கான இந்தியத் தூதராக இருந்த நிருபமா, இலங்கைக்கு இந்தியா வேண்டிய உதவிகளைச் செய்ய உதவினார். மேலும் வட இந்திய மீடியாக்களை இலங்கைக்கு வரவழைத்து போர் தொடர்பான செய்திகளில் இலங்கை அரசுக்கும் இந்தியாவுக்கும் அதிக பாதிப்பு வராமலும் பார்த்துக் கொண்டார்.
இந் நிலையில் இவரது பதவிக் கலாம் வரும் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தற்போது அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருக்கும் மீரா சங்கருக்கு பதிலாக நிருபமா ராவ் அந்தப் பதவியில் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
முன்னதாக 1973 பேட்ச் ஐஎஃப்எஸ் அதிகாரியான நிருபமா ராவின் பதவிக் காலம் டிசம்பர் 2010லேயே முடிவடைந்துவிட்டது. ஆனால், அவரது பதவிக் காலத்தை மத்திய அரசு ஜூலை 2011 வரை நீடித்தது.
இந்தியத் தூதரக அதிகாரிக்கு எதிராக பணிப்பெண் வழக்கு:
இந் நிலையில் அமெரிக்காவில் இந்தியத் தூதரகத்தின் மூத்த அதிகாரிக்கு எதிராக அவரது வீட்டின் முன்னாள் பணிப் பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் பிரபு தயாளின் வீட்டில் பர்த்வாய் (45) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
மாதம் 300 டாலர் சம்பளத்திற்கு தன்னை நீண்ட நேரம் வேலை வாங்குவதாகவும், தனது பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டு தயாள் தர மறுப்பதாகவும் பர்த்வாய் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் பாலியல் ரீதியான முயற்சிகளையும் பிரபு தயாள் தன்னிடம் மேற்கொண்டார் என்றும் பர்த்வாய் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளை தயாள் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.