இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைவாகவே பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு மே மாத கடைசியில் முன்கூட்டியே தொடங்கியது. ஆனால், போதிய அளவு பெய்யவில்லை.
கேரளா, தமிழ்நாட்டின் மேற்கு பகுதிகள், கடலோர கர்நாடகம், கோவா, மகாராஷ்டிர மாநிலங்களில் இப்போது கன மழை பெய்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், வெயில் தான் வாட்டி எடுத்து வருகிறது. மும்பையில் மட்டும் சில நாட்கள் மழை கொட்டித் தீர்த்தது.
வழக்கமாக இந்த பருவ மழைக்காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை என 4 மாதங்கள் நீடிக்கும். ஆனால், ஒரு சொட்டு மழை கூட இல்லாமல் ஜூன் மாதத்தின் 3 வாரங்கள் ஓடிவிட்டன.
இனியும் இந்த மழை போதுமான அளவு பெய்யுமா என்பதும் சந்தேகமாகிவிட்டது. இதனால் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட குறைவாகவே பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்பு இந்த ஆண்டு சராசரி அளவுக்கு மழை பெய்யும் ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இப்போது தான் சொன்னதை மாற்றிப் பேச ஆரம்பித்துவிட்டது வானிலை மையம்.
அதாவது, செப்டம்பர் வரையிலான 4 மாத காலத்தில் சராசரியாக 95 சதவீதம் அளவுக்கே மழை பெய்யும். இதில் 4 சதவீதம் கூடுதல் அல்லது குறைவாக பெய்யலாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது. ஆனால், அந்த அளவுக்காவது பெய்யுமா என்பதும் தெரியவில்லை.
அதே நேரத்தில் ஜூலை மாத தொடக்கத்தில் மழை குறைந்தாலும், ஜூலை மாத கடைசியில் மழை தீவிரமடையும் என்றும் ஆகஸ்டு மாதம் 94 சதவீதம் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் நம்பிக்கையுடன் கூறுகிறது.
நம்பிக்கையுடன் வானம் பார்ப்போம்!