தோல்வி திமுகவுக்குத்தான், கொள்கைகளுக்கு அல்ல-பரிதி இளம்வழுதி
நாகப்பட்டனம்: சட்டசபைத் தேர்தலில் திமுகதானே தவிர அதன் கொள்கைகள், கோட்பாடுகள் அல்ல. அதற்கு என்றுமே தோல்வி கிடையாது என்று கூறியுள்ளார் திமுக துணைப் பொதுச் செயலாளர் பரிதி இளம்வழுதி.
நாகப்பட்டனத்தில் திமுக உயர் நிலை செயல் திட்டக் குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பரிதி பேசுகையில்,
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வேண்டுமானால் நமது கட்சி தோற்றிருக்கலாம். ஆனால் தி.மு.க.வின் கொள்கை, கோட்பாடுகள் என்றைக்குமே தோற்பது இல்லை. பொதுவாக தேர்தலில் தோற்றவர்களுக்குத்தான் 2அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் வெற்றி பெற்றவர்களுக்கு இந்த தேர்தல் அதிர்ச்சியை தந்துள்ளது.
காரணம் அவர்கள் எதிர்பார்க்காத வெற்றி கிடைத்ததுதான். இந்த தேர்தலில் புதிதாக ஓட்டு போட்டவர்கள் விளையாட்டு தனமாக ஆட்சி மாற்றம் வேண்டும் என்று ஓட்டு போட்டதாக சொல்லப்படுகிறது.
புதிய வாக்காளர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் தான். ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களின் சமச்சீர் கல்வியைத்தான் நிறுத்தினார்கள்.
இதுமட்டுமின்றி மக்களுக்கு பயன்தரும் கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் ஆகிய திட்டங்களையும் நிறுத்தி விட்டார்கள். புதிதாக வாக்களித்த கல்லூரி மாணவர்களுக்கு 1991-1996, 2001-2006 வரை ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தார் என்பது தெரியாது.
ஒரு அரசு கொண்டு வரும் திட்டத்தை அடுத்து வரும் அரசு தொடர வேண்டும். எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை திமுக தலைவர் கலைஞர் நிறுத்தவில்லை. அந்த சத்துணவுடன் வாரத்திற்கு 5 முட்டைகளை வழங்கினார்.
2001-2006 வரை அ.தி.மு.க. ஆட்சியில் வருங்கால மின் தேவையையும், மின்பற்றாக்குறையையும் நீக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்தான் தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏற்பட்டது.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை. சட்டசபை தேர்தல் முடிவு வெளியாகும் போது வழிப்பறி கொள்ளையர்கள் ஆந்திரா ஓடி விட்டார்கள் என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் தற்போது தமிழகத்தில கொலை, கொள்ளை, வழிப்பறி என்று தான் செய்தி வருகிறது என்றார் பரிதி இளம்வழுதி.