விலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை... உணவுப் பணவீக்கம் கடும் உயர்வு!!
டெல்லி: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு, ஒரு பக்கம் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதங்களை உயர்த்திக் கொண்டே போகிறது.
ஆனால் இதற்கு பலன் பூஜ்ஜியம்தான் என்பதை உயரத் தொடங்கியுள்ள உணவுப் பணவீக்கம் உணர்த்தியுள்ளது.
இந்த வாரம் மீண்டும் கிடுகிடுவென உயர ஆரம்பித்துள்ளது உணவுப் பணவீக்கம். மீண்டும் இரட்டை இலக்கத்துக்கு தாவி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இப்போது 9.13 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் 8.96 சதவீதமாக இருந்தது.
வட்டி வீதம் உயர்த்தப்பட்ட கடந்த 1 வாரத்தில் சந்தையில் பல்வேறு பொருள்களின் விலைகளில் கணிசமான உயர்வு காணப்படுகிறது. குறிப்பாக காய்கறிகளின் விலையில் 50 சதவீத உயர்வு காணப்படுகிறது. வரும் வாரங்களில் இது உணவுப் பணவீக்க உயர்வை மேலும் துரிதப்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முதன்மைப் பொருள்களின் விலை 12 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. பால் மற்றும் இறைச்சியின் விலையிலும் தொடர் உயர்வு காணப்படுகிறது.
மார்ச் இறுதிக்குள் பணவீக்கத்தை 7 சதவீதத்துக்குள் கொண்டுவருவோம் என பிரதமரும் மத்திய நிதியமைச்சரும் சபதமே கூறினார்கள். ஆனால் இதுவரை 9 சதவீத்தை ஒட்டியே பணவீக்கம் உள்ளது.
விலையைக் கட்டுப்படுத்த வேறு நேரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வட்டி வீத உயர்வை மட்டுமே பெரிய கருவியாக நம்பிக் கொண்டுள்ளது மத்திய அரசு. ஆனால் அதனால் எந்தப் பலனும் இல்லை என நிரூபணமாகியுள்ளது.
'எரிபொருள் மற்றும் மின்சார விலை உயர்வு, உணவுப் பொருள்களின் விலை உயர்வு, மூலப்பொருள்களின் விலை உயர்வு போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கான நேரடி நடிவடிக்கைகள் எதையும் இதுவரை மத்திய அரசு மேற்கொள்ளவே இல்லை. சக்தி வாய்ந்த நேரடி பொருளாதார கட்டுப்பாட்டு நடவடிக்கை மட்டுமே இனி பலன்தரும்' என பொருளியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.