தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு-உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்தியில் முன்னனியில் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் உப்பு பல்வேறு மாநிலங்களுக்கும், இந்தோனேசியா, மாலத்தீவு, பிலிபைன்ஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் வேம்பார் முதல் ஆறுமுகநேரி வரை 25 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் கடலில் இருந்து நேரடியாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு உப்பு பாத்திகளில் தேக்கி உப்பு உற்பத்தி செய்யப்பட்டது.
கடல் மட்டம் குறைந்து கால்வாய் தூர்த்து போனதால் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு தற்போது உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக உப்பு உற்பத்தி சற்று மந்தமாக காணப்பட்டது. தற்போது வெயில் அதிகமாக இருந்தாலும் இதமாக வீசும் தென்மேற்கு பருவ காற்று காரணமாக உப்பு உற்பத்தி பணி மற்றும் உப்பு வாறும் பணி முழு வீச்சாக நடந்து வருகிறது.
தொடர்ந்து உப்பளங்களில் உற்பத்தி செய்யப்படும் உப்பு அருகில் அம்பரங்களாக குவித்து வைக்கப்பட்டு அங்கிருந்து லாரிகளில் அரவை மில்கள் மற்றும் குடோன்களுக்கு ஏற்றி செல்லப்படுகிறது.
மேலும் தற்போது உப்புக்கு நல்ல விலையும், கிடைத்து வருகிறது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.