தெரு விளக்குகளை எரிய வைக்கும் சூரிய காற்றாலை திட்டம்!
இந்தத் திட்டத்திற்கு வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு எம்.பி. நிதியுதவி செய்து உதவியுள்ளார் என்பதுதான் இங்கு முக்கியமானது.
இந்தியாவில் குஜாரத்திற்கு அடுத்தபடியாக சூரிய சக்தி மற்றும் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி தமிழகத்தில்தான் அதிகளவில் நடக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் தென்மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வேகமாக வீசும் காற்றினை தற்போது ஆக்க சக்தியாக பயன்படுத்தி வருகின்றனர்.
நெல்லை பகுதியில் 2500க்கும் மேற்பட்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. மரபு சாரா எரிசக்தி துறையில் காற்றாலையை தொடர்ந்து வந்த மாற்றமே சூரிய காற்றாலை.
காற்றாலையுடன் சூரிய சக்தியையும் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம், திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே நயினாகரம் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் தெரு விளக்குகளுக்காக சூரிய காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது. அதோடு சூரிய சக்தி சோலார் தகடுகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் வினாடிக்கு 4 முதல் 6 மீ்ட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் இத்தகைய காற்றாலைகள் அமைக்க ஏதுவாக உள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஊராட்சி தலைவி டெய்சிராணி கூறுகையில், அரசின் ஏற்பாட்டில் வடமாநில பார்லிமெண்ட் உறுப்பினர் ஒருவரது நிதியளி்ப்பு 4 லட்ச ரூபாய் செலவில் இந்த காற்றாலை எங்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்டது.
தற்போது சமத்துவ புரத்தில் எரியும் 15 தெரு மின்விளக்குகள் எந்த வித சிரமமும் இன்றி சூரிய காற்றாலைகள் முலம் எரிகிறது என்றார்.