வீட்டு பணியாளர்களுக்கு ரூ 30000 மருத்துவ காப்பீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 'ராஷ்ட்ரீய ஸ்வஸ்திய பீம யோஜனா' என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன்படி, ஒரு தொழிலாளருக்கும், அவருடைய குடும்பத்தினர் 4 பேருக்கும் சேர்த்து, ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. இதற்காக, பயனாளிகளுக்கு 'ஸ்மார்ட் கார்டு' தரப்படும். அதைக் கொண்டு, குறிப்பிட்ட மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம்.
கட்டிட தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோரைத் தொடர்ந்து, சமீபத்தில், பீடி தொழிலாளர்களுக்கும் இத்திட்டம் விஸ்தரிக்கப்பட்டது.
வீட்டு பணியாளர்களுக்கும்
இந்நிலையில், வீட்டு வேலை செய்பவர்களுக்கும் இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தை விஸ்தரிக்க மத்திய மந்திரிசபை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பதிவு செய்யப்பட்ட, 47.5 லட்சம் வீட்டு பணியாளர்களுக்கு இத்திட்டம் அமல்படுத்தப்படும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தேசிய சமூக பாதுகாப்பு நிதியத்தில் இருந்து 'பிரிமியத் தொகை' ஒதுக்கீடு செய்யப்படும். பிரிமியத் தொகையில் 75 சதவீதத்தை மத்திய அரசும், 25 சதவீதத்தை மாநில அரசுகளும் செலுத்தும்.
இத்திட்டத்துக்காக, மத்திய அரசுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.29 கோடியே 70 லட்சமும், அடுத்த நிதியாண்டில் ரூ.74.25 கோடியும், 2013-2014-ம் நிதியாண்டில் ரூ.148.50கோடியும், 2014-2015-ம் நிதியாண்டில் ரூ.297 கோடியும் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.