கள்ளக் காதல்கள்.. வாலிபர் தற்கொலை, நர்ஸ் தீக்குளிப்பு, 2 பெண்கள் கொலை!
பவானி, வேலூர் & சென்னை: கள்ளக் காதலியிடம் இருந்து பிரித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனம் உடைந்த நர்சு தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார். இதில் தாயும், தந்தையும் தீயில் கருகினர்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆப்பக்கூடலை சேர்ந்த செல்வி (25) கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டில் குடியிருந்தவர் திருமுருகன் (30). மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கும் செல்விக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. 3 நாட்களுக்கு முன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி போலீஸ் நிலையத்துக்கு சென்று தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இதையடுத்து இருவரின் பெற்றோரையும் போலீசார் அழைத்து பேச்சு நடத்தினர். திருமுருகன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் செல்வியை போலீசார் அவரிடமிருந்து பிரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்துவிட்டனர்.
இதனால் வேதனையடைந்த திருமுருகன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தத் தகவலை அறிந்த செல்வி தனது பெரியப்பாவின் குடிசை வீட்டுக்குச் சென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகி அலறித் துடித்தார். இதில் அந்த வீடும், தொடர்ந்து அருகருகே இருந்த 5 குடிசை வீடுகளும் தீப்பற்றிக் கொண்டன.
அந்த வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். செல்வியின் தந்தை அம்மாசை, தாய் பத்மினி ஆகியோர் வீட்டிற்குள் ஓடிச்சென்று தீயை அணைத்து மகளை மீட்டனர். பலத்த தீக்காயம் அடைந்த செல்வி ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
செல்வியைக் காப்பாற்றியபோது அம்மாசை, பத்மினி ஆகியோருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கள்ளக்காதல் கொலை...
சென்னை சைதாப்பேட்டையில் கள்ளக் காதல் பிரச்சனையால் பெண் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் கள்ளக் காதலில் ஈடுபட்ட உறவுக்கார வாலிபர் அவரை கொலை செய்துவிட்டு நகைகளையும் எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
சென்னை சைதாப்பேட்டை தர்மராஜா கோவில் தெருவில் வசிப்பவர் கட்டிட காண்ட்ராக்டர் சிவானந்தம். இவர், முன்பு மும்பையில் வேலைபார்த்தபோது அஸ்வினி (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் திவ்யன் என்ற மகன் உள்ளான்.
6 மாதங்களுக்கு முன்பு சிவானந்தத்தின் அத்தை மகன் சுரேஷ் (27) சென்னை வந்தார். இன்னொரு வீட்டில் தங்கியிருந்தபடி சிவானந்தனுடன் சேர்ந்து கட்டிட காண்டிராட் வேலையை பார்த்து வந்தார்.
இந் நிலையில் நேற்று சிவானந்தம் வெளியே சென்ற நிலையில் சுரேஷ் வீட்டுக்கு வந்து அஸ்வினியோடு மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றார்ர். சற்று நேரத்தில் திரும்பி வந்து வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டனர்.
மாலையில் சுரேஷ் மட்டும் வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே போனார். இரவு சிவானந்தம் வீட்டுக்கு வந்தபோது, வீடு பூட்டியிருக்கவே சந்தேகமடைந்த அவர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அஸ்வினி நிர்வாணமான நிலையில், கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார்.
அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. தலையும் நசுங்கிப் போய் காணப்பட்டது. அஸ்வினியின் நகைகள், வீட்டிலிருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்த போலீசார் அஸ்வினியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அஸ்வினிக்கும் சுரேசுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட அஸ்வினிக்கு நேற்று பிறந்த நாள் ஆகும். அவர் சுரேசுடன் வெளியில் சென்று பிறந்தநாளை கொண்டாடிவிட்டு வந்துள்ளார். அதன்பிறகு இந்தக் கொலை நடந்துள்ளது.
மனைவி படுகொலை-போலீசில் கணவர் சரண்:
வேலூர் ஓல்டு டவுனைச் சேர்ந்த குமரன் (26) இரும்பு கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (22). இவர்களுக்கு ஐஸ்வர்யா என்ற 2 வயது குழந்தை உள்ளது.
சரண்யாவுக்கும் அதே பகுதியில் உள்ள குமரனின் நண்பர் ஒருவருக்கும் கள்ள தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று காலை கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இரும்பு கம்பியால் சரண்யாவின் தலையில் பயங்கரமாக தாக்கினார் குமரன். இதில் மண்டை உடைந்த சரண்யா அங்கேயே பலியானார்.
இதையடுத்து குமரன் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.