ரேஷன் அரிசி கடத்தல்: ஒரே மாதத்தில் முக்கியப் புள்ளி உள்பட 18 பேர் கைது
செங்கோட்டை: தமிழகத்தில் கடந்த 1 மாதத்தில் ரேசன் அரிசி கடத்திய 18 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஏடிஜிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழக காவல் துறை ஏடிஜிபி ராதாகிருஷ்ணன் நேற்று நெல்லை மாவட்ட சோதனைச் சாவடிகளை ஆய்வு செய்ய தமிழக-கேரள எல்லை பகுதியான புளியரைக்கு வந்தார். அங்கு காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபடும் பகுதிகளையும், மழை பெய்தால் ஒழுகும் கூரை ஷெட்டுகளையும் ஆய்வு செய்து சோதனைச் சாவடிகளில் உரிய வசதிகள் செய்துகொடுக்குமாறு உத்தரவிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளும் ஆய்வு செய்யப்படுகிறது. மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் வழியாக அண்டை மாநிலங்களுக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள், அரிசி, மணல் ஆகியவற்றை கடத்திச் செல்ல முடியாத வண்ணம் முழுமையாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட முக்கிய புள்ளிகள் உள்பட 18 பேர் கடந்த மாதத்தில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து அரிசி, மணல், ஆகிவை அண்டை மாநிலத்திற்கு கடத்தப்படுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் முக்கிய எல்லை பகுதியாக இருக்கும் புளியரை சோதனைச் சாவடி சிறப்பாக செயல்படுகிறது. அங்கு விரைவில் உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
மேலும், உள்ளூர் போலீசாரும் தீவிர சோதனைகள் நடத்தி வருகின்றனர். அவர்கள் செயல்பாடு பாராட்டிற்குரியது.
நெல்லை காவல் கிணறு சோதனைச் சாவடி போதிய வசதிகளோடு விரைவில் புதிய இடத்தில் அமைக்கப்பட உள்ளது. பொள்ளாச்சி வழியாக கடந்த காலங்களில் அதிக கடத்தல் நடந்தேறியுள்ளது. தற்போது அவை கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் காலங்களில் எல்லையோரத்தில் இருக்கும் சோதனைச் சாவடிகளில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். மாநில எல்லைகளில் பணியாற்றும் காவலர்களுக்கு பல்வேறு பாதுகாப்பு சாதனங்கள், கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளன.
நாகர்கோவில் வழியாக கேரளாவுக்கு செல்ல 30 வழித்தடங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. அத்தடங்கள் அனைத்தும் காவல்துறை கட்டுபாட்டுக்குகள் கொண்டு வரப்பட்டு கடத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்றார்.
இந்த ஆய்வின்போது நெல்லை சரக டிஐஜி (பொறுப்பு) வரதராஜுலு, நெல்லை எஸ்பி விஜேயந்திர பிதாரி, டிஎஸ்பி சீனிவாசன், இன்ஸ்பெக்டர் மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.