உதவித் தொகை: 20 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்தன-விசாரிக்க தனிக்குழு
நெல்லை: தமிழகம் முழுவதும் முதியோர், ஆதரவற்றோர், விதவைகள் ஆகியோருக்கான உதவித் தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டதை அடுத்து 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இது குறித்து தனிக்குழு அமைத்து விசாரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிபடி முதியோர், ஆதரவற்றோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகையை ரூ.500-ல் இருந்து ரூ.1000-க உயர்த்தினார். இதையடுத்து தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள 218 தாலுகா அலுவலகஙகளின் கீழ் செயல்படும் 2 ஆயிரத்து 506 கிராம நிர்வாக அலுவலகங்களில் முதியோர், விதவை, ஆதரவற்றோர், மாற்று திறனாளிகள் உதவித் தொகை கேட்டு லட்சக்கணக்கில் மனுக்கள் குவிந்தன.
மேலும், திங்கள் கிழமை தோறும் நடக்கும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தின்போது கலெக்டர் அலுவலகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் மனுக்கள் கொடுத்தனர். அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 தாலுக்காக்களில் மட்டும் இதுவரை 75 மனுக்கள் வரை பெறப்பட்டுள்ளன. இதே போல் தமிழகம் முழுவதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் உதவித் தொகை கேட்டு குவிந்துள்ளன.
இந்த மனுக்கள் குறித்து தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.