புதுவையில் ஜூலை 1 முதல் ஏழைகளுக்கு 35 கிலோ இலவச அரிசி: ரங்கசாமி
புதுவை: புதவையில் உள்ள ஏழை மக்களுக்கு வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கபப்டும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ரங்கசாமி கூறுகையில், "புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்பவர்களுக்கு வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.
தேர்தல் நேரத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 25 கிலோ அரிசியும், மஞ்சள் நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு 15 கிலோ அரிசியும் இலவசமாக வழங்குவோம் என்று அறிவித்திருந்தோம். அறிவித்தபடி வழங்க துரித நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். முதியோர் ஓய்வூதியத்தை ரூ. 750-ல் இருந்து ரூ. 1000-க உயர்த்தியுள்ளோம். நிலுவையில் இருந்த மாணவர்களுக்கான அரசு நிதியுதவிக்காக ரூ. 7.9 கோடி வழங்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் ரேஷன் கடைகளில் கோதுமை கிடைக்கும்.
லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு கொடுத்த விவசாயிகளுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் உள்ள சர்க்கைரையை விற்பனை செய்ய அனுமதி அளிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளேன். பால் உற்பத்தியைப் பெருக்க கறவை மாடுகள் வாங்கவிருக்கிறோம்," என்றார்.