காங்கிரஸுடன் கூட்டணி வைத்ததால்தான் திமுகவுக்கு தோல்வி! - டி ராஜேந்தர்
குற்றாலம்: காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான் தி.மு.க. தோல்வி அடைந்தது என்று லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் கூறினார்.
குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "லட்சிய தி.மு.க.வின் தென்மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குற்றாலத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் அரசியலில் இனி தீவிரமாக லட்சிய தி.மு.க. செயல்படுவது என முடிவு எடுக்கப்பட்டது.
வருகிற உள்ளாட்சி தேர்தலில் லட்சிய தி.மு.க. போட்டியிடுகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் தி.மு.க. தோல்வி அடைந்தது. சமச்சீர் கல்வி ஏழை, எளிய மாணவர்களுக்கு பயன்படும். எனவே அ.தி.மு.க. அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சட்டமன்ற புதிய கட்டிடத்தில் சட்டமன்றம் இயங்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்ந்து உள்ளது. இதுதான் மத்திய அரசின் சாதனை.
ஆர்ப்பாட்டம்
இந்த விலை உயர்வை லட்சிய திமுக கண்டிக்கிறது. டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களில் விலை அதிகரிக்கும். இதனைத் தடுக்க மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.
டீசல் விலை உயர்வைக் கண்டித்து விரைவில் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் லட்சிய திமுக சார்பில் மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்," என்றார்.