கார்கில் வெற்றியை கேவலப்படுத்தியதாக விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
சென்னை: கார்கில் வெற்றியை கேவலப்படுத்தியதாக கூறி தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முன்னதாக சென்னையைச் சேர்ந்த ராஜன் என்பவர் விஜயகாந்த் மீது உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில்,
ரிஷிவந்தியம் தொகுதியில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, பத்திரிகைகளுக்கு விஜயகாந்த் பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் அவரிடம், எப்படிப்பட்ட தேர்தல் வியூகம், திட்டம் வகுத்து இருக்கிறீர்கள்? என்று கேட்டனர்.
பாகிஸ்தானுடன் கார்கில் உள்ளிட்ட போர்களை நடத்தியபோதே இந்தியா எந்த வியூகமும் வகுக்கவில்லை என்று அதற்கு விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டு உள்பட பாகிஸ்தான் தொடர்பான எந்தவொரு விவகாரத்திலும் மக்கள் மிகுந்த உணர்ச்சிமயமாகிவிடுவார்கள். இந்த நிலையில் இப்படிப்பட்ட ஒரு அவதூறான கருத்தை மக்கள் மத்தியிலும், பாதுகாப்பு படையினர் மத்தியிலும் பரப்பியிருப்பது குற்றமாகும்.
இந்திய ராணுவத்துக்கு எதிரான அவதூறு கருத்துகளை விஜயகாந்த் கூறியிருக்கிறார். இப்படி அவர் பேசியது, இந்திய தண்டனைச் சட்டத்தின் 131, 133 மற்றும் 135-ம் பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரியதாகும்.
இந்திய அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை, பற்றுள்ளவர்களுக்குத்தான் சங்கம் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான அங்கீகாரம் தரப்படுகிறது. ஆனால் அவதூறாக பேசி அதை விஜயகாந்த் மீறியுள்ளார். எனவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற அங்கீகாரத்தை தே.மு.தி.க. இழந்துவிட்டது.
தமிழகத்தில் 41 தொகுதிகளில் அந்த கட்சி போட்டியிடுகிறது. அங்கீகாரத்தை இழப்பதால் அந்த கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக விஜயகாந்தை குறுக்கு விசாரணை செய்ய என்னை அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தலைமையிலான பெஞ்ச், மனுவைப் பார்க்கும்போது எந்தவொரு முகாந்திரமும் இருப்பதாக தெரியவில்லை என்று கூறிய நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.